அருண் ஜெட்லிக்கு தீவிர சிகிச்சை.. பிரதமர் வருகிறார்.. மருத்துவமனையை சுற்றி போலீஸ் குவிப்பு
டெல்லி: முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரை பார்க்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தார். தற்போது மருத்துவமனையை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் சற்று நேரத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
66 வயதாகும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி டெல்லி எய்மஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக அப்போது மருத்துவமனையில் ஜெட்லி அனுமதிக்கப்பட்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை.
தலைவர்கள் விசாரித்தனர்
பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் சென்று விசாரித்து சென்றனர். இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கௌதம் கம்பீர் வருகை
இந்நிலையில் இன்று மாலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லியின் உடல் நிலைகுறித்து விசாரிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளார். இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீரும் எய்ம்ஸ் வந்துள்ளார்.
உடல் நிலை மோசம்
இதனிடையே அருண்ஜெட்லியின் உடல் நிலை மிகமோசமாக உள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவனையை சுற்றி ஏராளமான போலீசார் இன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
எய்மஸ் முன் பரபரப்பு
பிரதமர் மோடி மற்றும உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஸ்மிருத இராணி, ராம் விலாஸ் பஸ்வான் உள்பட பலரும் வர உள்ளார்கள். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது.