மத்திய அமைச்சர் பதவி வேண்டாம்.. மோடிக்கு அருண் ஜேட்லி பரபரப்பு கடிதம்
டெல்லி: உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் அமிருதசரஸ் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங்கிடம் அருண் ஜேட்லி தோற்றார். இதைத் தொடர்ந்து ஜேட்லி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அழகாக பதில் அளிப்பார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 18 மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்திருந்தார்.
பாதிப்பு
மாநிலங்களவை எம்பியாக உள்ள அருண் ஜேட்லிக்கு மத்திய நிதி அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. எனினும் அவருக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
தேஜகூ
நாளை மத்தியில் மோடி அமைச்சரவை பதவியேற்றுக் கொள்ளும் நிலையில் அருண் ஜேட்லி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் அங்கமாக இருந்ததை மிகப் பெரிய கவுரமாக கருதுகிறேன்.
|
ஓய்வு
முதல்முறையாக இடம்பெற்ற தேஜகூ கூட்டணி அமைச்சரவையிலும், கட்சியிலும், எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் எனக்கு கட்சி தலைமை பொறுப்புகளை வழங்கியது. கடந்த 18 மாதங்களாக எனக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் மருத்துவர்கள் என்னை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
உடல்நிலை
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணிகளை செவ்வனே செய்து முடித்தேன். இதன் பிறகு, நீங்கள் கேதார்நாத்திலிருந்து வந்தவுடன் உங்களை சந்தித்து எனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என வாய்மொழியாக தெரிவித்தேன். இதன் மூலம் எனது உடல்நிலையில் கவனம் செலுத்தவுள்ளேன்.
உடல்நிலை
உங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றுள்ளது. நாளை புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இந்த நிலையில் எனது உடல்நிலையை கவனிக்க நான் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதால் எனக்கு மீண்டும் எந்தவொரு பொறுப்பும் வழங்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
செய்ய தயார்
மற்றபடி கட்சிக்கும் ஆட்சிக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வெளியிலிருந்து செய்ய தயார் என அந்த கடிதத்தில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நிதி அமைச்சர் பதவி அமித்ஷாவுக்கோ பியூஷ் கோயலுக்கோ வழங்கப்படும் என தெரிகிறது. அது போல் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் உடல்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க வேண்டாம் என கருதுவதாக தெரிகிறது.