அருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார் அருண் ஜேட்லி இதன் காரணமாக மோடியின் இரண்டாவது அரசு ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார் ஜெட்லி.
இந்த நிலையில் மூச்சுத் திணறல் உள்ளிட்ட மேலும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காலை அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அன்றைய தினம் அடுத்து முக்கிய பிரமுகர்களான, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று ஜெட்லி உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு திரும்பினர்.
அன்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில், ஜெட்லி உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது இதயத் துடிப்பு உள்ளிட்டவை சரியாக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரு வாரம் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அருண் ஜேட்லியின் உடல் நிலை தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் செய்தி குறிப்பு வெளியிடவில்லை.
நேற்று இரவு அமித் ஷா மற்றும் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் திடீரென எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜேட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு திரும்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருண் ஜெட்லி உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றும் அவை தெரிவிக்கின்றன.