மெலானியா டிரம்ப் பள்ளி வருகை நிகழ்ச்சி.. வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டாரா கெஜ்ரிவால்?
டெல்லி: அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா டிரம்ப் பள்ளி வருகையின் போது அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் நேராக அகமதாபாத்திற்கு வந்து அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார். பின்னர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை மனைவி மெலானியாவுடன் சுற்றி பார்க்கிறார்.
இந்த பயணத்தின் போது டிரம்புடன் மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெரெட் குஷ்னர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை- உற்சாக வரவேற்பளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள்
அஞ்சலி
ஆக்ராவிலிருந்து இவர்கள் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அங்கு 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்கள். பின்னர் அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காந்தியின் சமாதியான ராஜ்காட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
நிகழ்ச்சி
இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது அவர்கள் இரு தரப்பு நல்லுறவு குறித்தும் பயங்கரவாதத்தை வேரறுப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இவர்கள் ஆலோசனை செய்யும் நேரத்தில் மனைவி மெலானியா டெல்லியில் உள்ள பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.
அனைத்து ஏற்பாடுகள்
அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகுப்பை மெலானியா பார்வையிடவுள்ளதால் அவரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பதாக சொல்லப்பட்டது. மேலும் மெலானியாவுக்கு பள்ளி முழுவதையும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சுற்றிக் காட்டுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடத்தப்பட்டன.
தூதரகம் முடிவு
இந்த நிலையில் மெலானியாவின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக கெஜ்ரிவாலும் சிசோடியாவும் பங்கேற்பது சரியாக இருக்காது என அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு இருக்கும் என்ற சந்தேகம் ஆம் ஆத்மி கட்சிக்கு வந்துள்ளது. ஆனால் இதை பாஜக மறுத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு யாரை அழைக்க வேண்டும் என்பதை அமெரிக்க தூதரகமே முடிவு செய்யும் என பாஜக தெரிவித்துள்ளது.