டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுங்க... மார்ச் 1 முதல் முதல்வர் கெஜ்ரிவால் காலவரையற்ற உண்ணாவிரதம்
டெல்லி: டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி மார்ச் 1ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. எந்த முடிவையும் செயல்படுத்த விடாமல், துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதாக டெல்லி உயர்நீதி மன்றத்தை கெஜ்ரிவால் அரசு நாடியது.
அந்த வழக்கில் டெல்லியில் துணை நிலை கவர்னர்தான் அதிகாரம் படைத்தவர், அவர் தான் நிர்வாகத்தின் தலைவர் என்று 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 4ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து கெஜ்ரிவால் அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், டெல்லி சட்டசபைக்குத்தான் முடிவு எடுக்கிற அதிகாரம் உள்ளது, துணை நிலை கவர்னருக்கு முடிவு எடுக்கிற தனி அதிகாரம் இல்லை என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. ஆனாலும்... கெஜ்ரிவால் அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்குமான மோதல் முடிவு ஏற்பட வில்லை.
இந்நிலையில், டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை உண்ணா விரதத்தில் இருக்க போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதற்காக மார்ச் 1ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிற்கு அதிகாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அண்மையில், டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறி ஆளுநர் மாளிகையில் உள்ள வரவேற்பு அரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் அவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.