வீட்டு வாடகையை செலுத்துகிறோம்.. இடத்தை விட்டு நகராதீர்.. கொரோனாவை ஒழிக்க உதவுங்கள்.. கெஜ்ரிவால்
டெல்லி: வீட்டிலேயே இருங்கள். உங்கள் வீட்டு வாடகையை நானே செலுத்துவேன் என புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொழில்துறைகள், கட்டடப் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் தொழிலாளர்கள் வேலையில்லாமலும் ஊதியம் இல்லாமலும் தவித்து வருகிறார்கள்.
கொரோனா.. கைகொடுத்த காண்டாக்ட் டிரெஸ்.. கலக்கிய விஜயபாஸ்கர் டீம்.. 8 பேரை கண்டுபிடித்தது எப்படி?
மளிகை பொருட்கள்
கடந்த வாரம் வரை பணி செய்தமைக்கு நிறுவனம் கொடுத்த ஊதியத்தை வைத்து கடந்த ஒரு வாரத்திற்கு உணவு சமைத்து சாப்பிட்டனர். தற்போது மளிகை பொருட்கள் தீர்ந்துவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் தங்கியுள்ள வீடுகளுக்கும் மேன்ஷன்களுக்கும் வாடகை தர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் ஒரு டெல்லி, தமிழகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பணி நிமித்தமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு செல்ல முற்பட்டனர்.
உத்தரவு
அவர்கள் செல்வதற்கு போக்குவரத்துகள் ஏதும் இயங்காத நிலையில் குழந்தைகளுடன் பல நூறு கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடக்கிறார்கள். இதற்காக கூட்டம் கூட்டமாக இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது கொரோனா தொற்று நோய்க்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இடம்பெயராதீர்
இதுகுறித்து அவர் கூறுகையில் நீங்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். பள்ளிக் கடட்டங்களில் தூங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழு அரங்கமும் இதற்காக காலியாக உள்ளது. குறைந்தபட்சம் 10 சமூக சமையலறைகள் வைத்து இதன் மூலம் உணவு சமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். அது தவிர பள்ளிக் குழந்தைகளுக்கான அனைத்து சத்துணவுக் கூடங்களிலும் உங்களுக்கு உணவு தயார் செய்யப்படும். எனவே யாரும் இடம்பெயராதீர்கள்.
தோல்வி
பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புலம் பெயருகின்றனர். அந்த மக்களை இரு கைகளை கூப்பி கேட்டு கொள்கிறேன். பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அறிவித்தபோது தயவு செய்து நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருங்கள் என அறிவித்தார். இதுதான் ஊரடங்கு மந்திரம். இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தோல்வி அடைவோம்.
நோய் தொற்று
உங்களில் இரண்டு அல்லது நான்கு பேருக்கு கொரோனா இருந்தாலும் அது மற்றவர்களுக்கு பரவி விடும். நீங்களுக்கு பாதிக்கப்படுவர். இந்த நோய் தொற்றுடன் கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள மக்களும் பாதிக்கப்படுவர். நாடு முழுவதும் பரவிவிட்டால் அதை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியம். டெல்லியிலிருந்து எங்கும் செல்லாதீர்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள். உங்களது வீட்டு வாடகையை நான் செலுத்துகிறேன். அவர்களின் வாடகையை அரசே செலுத்தும். வீட்டு உரிமையாளர்கள் அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.