''டெல்லி சம்பவத்துக்கு காரணமான கட்சி மீது நடவடிக்கை எடுங்கள்''...யாரை சொல்கிறார் கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லி டிராக்டர் பேரணி திசை மாறியதற்கு காரணமான கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
விவசாயிகளுடன் ஒற்றுமையுடன் நிற்குமாறு ஆம் ஆத்மி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால், போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசின் பொறுப்பற்றதனமே காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜகதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய சபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-
மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கொள்ளையடித்து விவசாயத்தை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரை இது உயிர்வாழும் கேள்வி. ஆனால் டெல்லியில் ஜனவரி 26 அன்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது. பேரணி வேறு பாதைக்கு சென்றதுக்கு யார் பொறுப்பு, போலீசார் யாருக்கு எதிராக போலி வழக்குகளை பதிவு செய்தார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை.
இந்த சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டியவர் யார், திசை மாறிய போராட்டத்துக்கு யார் பொறுப்பு, எந்த கட்சி பொறுப்பு என்பதை அறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தால் போராட்டங்கள் ஓய்ந்து விட போவதில்லை. விவசாயிகளுடன் ஒற்றுமையுடன் நிற்குமாறு ஆம் ஆத்மி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். விவசாயிகளுடன் நிற்கும்போது நமது கட்சியின் கொடியையும், தொப்பியையும் தூர வைத்து விடுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.