அதிகரிக்கும் கொரோனா... 117 மருத்துவமனைகளில் 2000 பெட்கள் ரெடி... டெல்லி அரசின் அதிரடி திட்டம்
டெல்லி: டெல்லியில் கொரோனாவைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகளை டெல்லி அரசு சிகிச்சைக்காக ஒதுக்க ஆரம்பித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீத படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று முதல் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 2000 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. மொத்தம் 117 தனியார் மருத்துவமனைகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு படுக்கைகளை தயார் செய்து வைக்கும் படி மாநில அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் வரிசையில் 4வது இடத்தில் உள்ளது டெல்லி. இங்கு ஒரே வாரத்தில் புதிதாக 3500 பேருக்கு தொற்று பரவியுள்ளது. குறிப்பாக நான்காவது கட்ட லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதலே தொற்றும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், 117 தனியார் மருத்துவமனைகளில் மொத்தமாக 2000 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். எனவே மக்கள் அச்சப்படுவதற்கு அவசியம் இல்லை. அரசின் கோரிக்கையை தனியார் மருத்துவமனைகள் ஏற்க வேண்டும். அதை நிராகரிக்க முடியாது.
மகாராஷ்டிராவில் இருந்து ஹரித்துவாருக்கு ரயிலில் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு
சமீபத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளியை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதாக கேள்விப்பட்டேன். யாரும் இப்படி செய்யக் கூடாது. இதுதொடர்பாக அந்த மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையில் கொரோனா பாசிட்டிவ் நோயாளி இருந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அல்லது அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை கொடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் கடமையாகும் என்றார் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவால் மேலும் கூறுகையில் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கூட படுக்கைகள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பெரிதாக இல்லை. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொரோனாவைரஸ் இங்கேயேதான் இருக்கும். ஒரே நாளில் அது ஓயாது. அத்துடன் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றார் கெஜ்ரிவால்.