டெல்லி: ஆம் ஆத்மிக்கு காத்திருக்கும் பிரமாண்ட வெற்றி.. வலுவான தலைவராக உருவெடுக்கும் கெஜ்ரிவால்
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலி ல் ஆம் ஆத்மி புதிய சரித்திரத்தை எழுதுகிற மிக பிரமாண்ட வெற்றியை பெற போகிறது என ஒட்டுமொத்த எக்ஸிட் போல் முடிவுகளும் ஒரே குரலில் தெரிவிக்கின்றன. எக்ஸிட் போல் ஆருடங்கள் நிஜமாகும் நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு வலிமையான தலைவராக இடம்பிடிப்பார்.
தமிழகத்து திராவிட கட்சிகளைப் போல் சித்தாந்த பாரம்பரியம் எதுவும் இல்லை.. நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் போல் இல்லை... வலதுசாரி சித்தாந்த்தை படுதீவிரமாக முன்னெடுக்கும் பாஜக மாதிரியும் இல்லை.
இன்னமும் சொல்லப் போனால் உலக அரசியல் பேசுகிற எந்த ஒரு சித்தாந்தமும் இல்லை.. ஆனால் மக்களுக்காக செயல்படுவோம் என்கிற நடைமுறை யதார்த்தத்தை முழக்கமாக முன்வைத்த கட்சி ஆம் ஆத்மி. இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கட்சி பத்தோடு பதினொன்று என்றுதான் தொடக்கத்தில் கருதப்பட்டது.
டெல்லியில் ஆம் ஆத்மி அலை.. 63 தொகுதிகள் வெல்ல கூடும்.. ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்
அசரவைத்த ஆம் ஆத்மி
2013 சட்டசபை தேர்தலில் முதன் முதலாக தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி 69 தொகுதிகளில் போட்டியிட்டு 28 இடங்களில் வென்றது. அப்போது அதன் வாக்கு சதவீதம் 29.49%. இதன் பின்னர் 2015 சட்டசபை தேர்தலில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது ஆம் ஆத்மி கட்சி. 70 தொகுதிகளில் 67 இடங்களில் அபார வெற்றியை பெற்று பாஜக, காங்கிரஸ் கட்சிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அத்தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் சதவீதம் 54.3%. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்ட போதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அதிரடியாக நிறைவேற்றியது ஆம் ஆத்மி கட்சி.
மக்கள் நம்பிக்கை
இதனால் சித்தாந்த பின்புலம் எதுவும் இல்லாமல் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்தது. பிற மாநில முதல்வர்களைப் போல படோபடமில்லாத முதல்வராக செயல்பாடுகள் மூலம் நிரூபித்து கொண்டே இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அதனால்தான் டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை தங்களில் ஒருவராக கருதுகின்றனர்.
குஜராத் மாடல்
ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்றதன் மூலம் இந்தியாவுக்கே வழிகாட்டி என புகழ்பெற்றார் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி. இந்த பேரலையால் 2014 லோக்சபா தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது. நாட்டின் பிரதமராகவும் ஆனார் நரேந்திர மோடி.
குஜராத் மாடலில் சந்தேகங்கள்
ஆனால் குஜராத் அலை எப்படி சாத்தியமானது என்பதில் 2002 கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிந்தைய முஸ்லிம்கள் படுகொலைகள் தொடங்கி ஏராளமான வினாக்கள் தொக்கியே நிற்கின்றன. ஆனால் டெல்லியில் கடும் குளிருக்கும் மத்தியில் வீசும் அரவிந்த் கெஜ்ரிவால் எனும் சூறாவளி புயலுக்கு இப்படியான சந்தேகப் பார்வைகள் எதுவுமே இல்லை.
அமித்ஷாவின் போராட்டம்
அதுவும் 200 எம்.பி.க்கள், ஒட்டுமொத்தமாக மத்திய அமைச்சரவை என பாஜக டெல்லி தேர்தலில் காட்டிய அதிரடி அடேங்கப்பா ரகம். அதுவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா விடிய விடிய வியூகம் வகுத்து 50க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்று எப்படியும் 45 இடங்களில் வெல்வோம் என கணக்குப் போட்டு காத்திருக்கிறார்.
வலிமையான தலைவராக உருவெடுக்கும் கெஜ்ரிவால்
ஆனால் இத்தகைய வலிமை வாய்ந்த பாஜகவையே போகிற போக்கில் ஊதித் தள்ளிவிட்டு டெல்லியில் அசைக்க முடியாத ஆகப் பெரும் கட்சியாக வலிமையோடு விஸ்வரூபம் காட்டும் ஆம் ஆத்மி என்கின்றன தற்போதைய தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள். இக்கருத்து கணிப்புகள் நிஜமானால் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மட்டும் அல்ல.. நாடு தழுவிய ஒரு வலிமை மிக்க தலைவராக தேசத்தின் வரலாற்றில் பரிணமிக்கக் கூடும் சாத்தியங்கள் அதிகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.