கால்வன் மோதல்.. ஜெய்சங்கருக்கு போன் போட்டு பேசிய பாம்பியோ.. இந்தியாவுக்கு முழு ஆதரவு?
டெல்லி: லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா சீனா மோதலுக்கு பிறகு முதல்முறையாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ, இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஜெய்சங்கரும் பாம்பியோவும் 3 முறை பேசிக் கொண்ட போதிலும் கால்வன் மோதலுக்கு பிறகு நடந்த முதல் உரையாடல் இதுதான்.
லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி இந்தியா -சீனா இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனாவின் இந்த போக்கு உலக நாடுகளின் கண்டனத்திற்குள்ளானது.
ஜெய்சங்கர்
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ தொலைபேசியில் உரையாடல் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எல்லையில் பதற்றம் தொடர்பாக இந்தியாவும் சீனாவும் ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் இந்த உரையாடல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்தியாவுக்கு ஆதரவு
அப்போது கால்வன் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்போம் என பாம்பியோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. கால்வன் மோதலுக்கு பிறகு கடந்த ஜூன் 17-ஆம் தேதி அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் நடுநிலையான கருத்தை தெரிவித்திருந்தது.
இந்தியா
அந்த அறிக்கையில் எல்லையில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான சூழலை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். 20 இந்திய வீரர்கள் மரணமடைந்துவிட்டதாக இந்திய ராணுவம் அறிவித்ததை நாங்கள் அறிவோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
விருப்பம்
எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும் சீனாவும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அமைதியான தீர்வு கிடைக்க ஆதரிக்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 நாட்களில் அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளில் இந்தியாவுக்கு ஆதரவான குரலை பிரதிபலிப்பதாக உள்ளன. சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த முடிவை அமெரிக்கா வரவேற்றது.
முழு ஆதரவு
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பதற்றமான சூழலுக்கு மத்தியில் தனது உறுதியான ஆதரவை பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் அமெரிக்கா தனது ஆதரவை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஜெய்சங்கரிடம் பாம்பியோ பேசும் போது அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.