கோவிஷீல்டு டோஸ் இடைவெளியில் மீண்டும் மாற்றம்? புதிய ஆய்வு கூறுவது என்ன.. மத்திய அரசு புது விளக்கம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது, அதேபோல தடுப்பூசி போடும் பணிகளும் மெல்ல வேகமடைந்து வருகிறது. இந்தச் சூழலில் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை மத்திய அரசு மீண்டும் மாற்றியமகைக் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாகவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சமயத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சுமார் நான்கு லட்சத்தைக் கூட தாண்டியிருந்தது.
அதேபோல தினசரி கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரத்தைத் தாண்டியிருந்தது. ஒருபுறம் கொரோனா பாதிப்பால் நோயாளிகள் உயிரிழந்தனர் என்றார், மறுபுறம் ஆக்சிஜன் பற்றைக்குறையும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
கடும் விமர்சனம்
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. மத்திய அரசு அரசு கொரோனா பாதிப்பை முறையாகக் கையாளவில்லை என்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் கொரோனா 2ஆம் அலையைத் தடுத்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். குறிப்பாக, தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததைப் பல தலைவர்களும் விமர்சித்தனர்.
தடுப்பூசி கொள்கை
கொரோனா 2ஆம் அலை சமயத்தில் மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி கொள்கை தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 18-44 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசிகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்ற கொள்கையைப் பலரும் கடுமையாக விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு தனது தடுப்பூசி கொள்கைகளை மாற்றியது. அதன்படி 18+ அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து வழங்கும் என்றும் அறிவித்தது.
தடுப்பூசி பணிகள்
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் கால இடைவெளியை மத்திய அரசு தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. முதலில் சில மாதங்கள் இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி 4-6 வாரங்களாக இருந்தது.
Recommended Video
தடுப்பூசி கால இடைவெளி
அதன் பின்னர் இரு டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 6-8 வாரங்களாக மத்திய அரசு நீட்டித்தது. இந்தச் சூழலில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய கடந்த மே மாதம் வேக்சின் டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை 12-16 வாரங்களாக மத்திய அரசு நீட்டித்தது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகவே கால இடைவெளி நீட்டிக்கப்படுவதாகவும் இது தடுப்பூசியை பயனற்ற தாக்கிவிடும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.
மத்திய அரசு விளக்கம்
இதனை முற்றிலுமாக மறுத்த மத்திய அரசு அரசு பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில், இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிப்பதன் மூலம் அதிக பலன் கிடைப்பது தெரியவந்துள்ளது என்றும் இதன் அடிப்படையிலேயே கோவிஷீல்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டது என விளக்கம் அளித்தது.
புதிய ஆய்வு
இந்நிலையில் கடந்த சில வாரம் இந்தியாவில் 2ஆம் அலையின் போது அதிக பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா குறித்த ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு முடிவுகள் வெளியானது. ஒருவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக் கொண்டால், அவரது உடலில் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அளவுக்கு ஆன்டிபாடிகள் உருவாகிறது என்றும் எனவே, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் மக்களுக்குச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசி பற்றாக்குறை
இந்தச் சூழலில் தடுப்பூசி பற்றாக்குறை நாட்டில் மெல்லக் குறைந்து வருகிறது. மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்த முதல் நாளே நேற்று சுமார் 80 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. வரும் காலங்களில் தடுப்பூசி போடும் பணிகள், இன்னும் வேகப்படுத்தப்படும் என்றும் தினசரி 1.25 கோடி பேருக்குத் தடுப்பூசி போட முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கால இடைவெளி
இந்நிலையில், தடுப்பூசிக்கான பற்றாக்குறை குறைந்துள்ளதால், மீண்டும் கோவிஷீல்டு கால இடைவெளியை மத்திய அரசு மாற்றியமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்து கோவிட் குழுவின் தலைவர் ஏ கே அரோரா கூறுகையில், வேக்சின், தொடர்ந்து தரவுகளைக் கண்காணித்து வருகிறோம். தற்போதைய சூழலில் கோவிஷீல்டு டோஸ்களுக்கான கால இடைவெளியை மாற்றும் எண்ணம் இல்லை. இருந்தாலும், இது நிரந்தரமாக நீட்டிக்கும் எனக் கூற முடியாது. பொதுமக்களுக்குத் தடுப்பூசியின் அதிகபட்ச பயன் கிடைக்கவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
மாற்றம்?
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தடுப்பூசி மட்டுமே ஒற்றை ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகப் பொதுமக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்துவதன் மூலம் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பது வல்லுநர்களின் கருத்து. எனவே, மக்களுக்கு விரைவாகத் தடுப்பூசிகளைச் செலுத்த ஏதுவாக தடுப்பூசி டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி மீண்டும் குறைக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம்.