காங்., கட்சியின் புதிய தலைவராகிறார் அசோக் கெலாட்.! ராஜஸ்தான் முதல்வராகவும் நீடிப்பார் என தகவல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற பின்னர், மக்களவை தேர்தலை சந்தித்த காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது மேலும் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட பெறமுடியாமல் போனது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பெற்ற தொகுதிகளை காட்டிலும், 8 தொகுதிகளை மட்டுமே கூடுதலாக காங்கிரஸ் கட்சி பெற்றது. எனவே இந்த படுதோல்வியால் காங்கிரஸ் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் என பலரும் விரக்தியடைந்தனர்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தேர்தல் முடிவுகளால் கடும் விரக்தியடைந்த ராகுல் காந்தியும், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார்.
இதனையடுத்து கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான ராஜினாா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டியிடம் அளித்தார். ஆனால் ராஜினாமாவை ஏற்க மறுத்து, ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் இந்த கோரிக்கையை ஏற்க ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார். கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவில் மிக பிடிவாதமாக உள்ளார் ராகுல்காந்தி.
இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ள அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக விரைவில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவராக நியமிக்க, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும், ராஜஸ்தான் மாநில முதல்வராகவும் அசோக் கெலாட் நீடிப்பார் என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.