தமிழக புராதன சின்னங்களில் எந்த பணியும் நடத்த முடியவில்லை.. லோக்சபாவில் கனிமொழி குற்றச்சாட்டு
டெல்லி: புராதான சின்னங்கள் குறித்து லோக்சபாவில் நேற்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு, மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் பதிலளித்தார். மத்திய தொல்பொருள் துறை பற்றி தமிழ்நாட்டில் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன, என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video
தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலேவின் கேள்விக்கு துணை கேள்வியாக கனிமொழி எழுந்து பேசுகையில், . மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதிஒதுக்க மாநில அரசுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். ஆனால் மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை. தமிழகத்தில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் அப்பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணிகளுக்கு மாநில அரசு அனுமதி அளிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், "மத்திய தொல்பொருள் துறை பற்றி தமிழ்நாட்டில் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதன் விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. அதன் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் வேறு பணிகளை செய்ய மாநில அரசுகளின் துறைகளுக்கு நாங்கள் பல முறை அனுமதிக்கவில்லை.
அதேநேரம் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டிய தேவை இருந்தால், அனுமதிகள் வழங்கப்படுகின்றன. நாட்டிற்குள் மட்டுமல்ல, வெளியில் கூட விதிமுறைகளின்படியேதான் செயல்படுகிறது. மாநில அரசுகளுக்கு இதுபற்றி ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரலாம். இந்திய தொல்லியல் துறை ( ஏ.எஸ்.ஐ) எந்த தடையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.