முறைகேடான மணல் குவாரிகளுக்கு தடை கோரி வழக்கு.. தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் பதிலளிக்க உத்தரவு
டெல்லி: முறைகேடான மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் முறைகேடாக மணல் குவாரிகள் நடப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 5 மாநில அரசுகளுடன் மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதால், இயற்கை வளம் கெடுவதாக தமிழகத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
மனுவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாயும் ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதால், நீராதாரம் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. விளைநிலங்கள் பாதிக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கம் முறையாக கண்காணிப்பதில்லை.
இந்த குவாரிகளை செயல்படாமல் தடுத்து நிறுத்துவதுடன் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
மணல் குவாரிகளுக்கு வழங்கப்படும் அனுமதியை முறைப்படுத்த வேண்டும் என்பதும், மனுதாரரின் கோரிக்கை. இவ்வழக்கை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது உச்சநீதிமன்றம் தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.