அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என அவரிடமே கேளுங்க.. ராணுவ தளபதி பேச்சு குறித்து விகே சிங்!
டெல்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முன்னின்று போராட்டங்களை நடத்தியவர்கள் குறித்து இந்திய ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் விமர்சித்தது சர்ச்சையானது. இது தொடர்பாக பதில் அளித்த முன்னாள் ராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான வி.கே.சிங், பிபின் ராவத்தின் பேச்சில் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்றார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறி பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. போலீசார் இதற்கு பதிலடியாக துப்பாக்கிச்சூடு, கைது நடவடிக்கை, தடியடி, சிறை என அதிரடியாக ஈடுபட்டு வருகிறார்கள்.
டிசம்பர் 31 ம் தேதி ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் ராவத், குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) க்கு எதிரான போராட்டங்களின் போது ஏற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை விமர்சித்தார்.
பிபின் ராவத் கருத்து
இந்த போராட்டங்களை முன்னின்று நடத்தும் தலைவர்கள் மக்களை பொருத்தமற்ற திசைகளில் வழிநடத்துவதாக குற்றம்சாட்டினார். ஏராளமான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களைப் பார்த்து வருகிறோம், அவர்கள் எங்கள் நகரங்களிலும் தீ வைப்பு மற்றும் வன்முறைகளைச் செய்ய வழி நடத்தப்படுவதாகவும், இப்படி வழிநடத்துபவர்கள் நல்ல தலைவர்கள் அல்ல என்றும் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
அரசியல் கூடாது
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ராணுவ தளபதியாக உள்ளவர் கட்சி சார்பு இல்லாமல் நடுநிலையுடன் அரசியல் இல்லாமல் பேச வேண்டும் என்று விமர்சித்து வருகின்றன.
சூழலை பாருங்கள்
இது தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான ஜெனரல் விகே சிங் கூறுகையில், போராட்டம் நடத்தும் போது அமைதியை நிலைநாட்டுமாறு மாணவர்களைக் கேட்பதில் அரசியல் எதுவும் இல்லை. நம்முடைய நாட்டில், எதிர்க்கட்சி எதையும் ஒரு சர்ச்சையாக மாற்ற முடியும். ராணுவ தளபதி ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கும் சூழலை பார்ப்பது தான் மிகச் சிறந்ததாக இருந்திருக்கும்.
மனசாட்சியிடம் கேளுங்க
அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று அவரிடமே கேளுங்கள். பொதுச்சொத்துக்கு வேண்டுமென்றே சேதங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று சொன்னால் அது அரசியலா? உங்கள் மனசாட்சியிடம் இந்த கேள்வியை கேட்டுப்பாருங்கள். இராணுவத் தளபதியிடம் நீங்களே விசாரித்து பாருங்கள் குறிப்பிட்ட சூழலில் இதை அவர் சொல்லியிருக்கலாம்.
மாணவர்களுக்கு அறிவுரை
"நான் கால்பந்து விளையாடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவும் அரசியல் என்று எதிர்க்கட்சி சொல்லும். அதை நம்புவோமா.. அவர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார், அது ஒரு மோசமான விஷயம் அல்ல. அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது" என்று ஜெனரல் சிங் கேள்வி எழுப்பினார்.