5 ஆண்டு- 2264 சீனா ஊடுருவல்கள்.. மோடியிடம் கேள்வி கேட்பீங்களா? நட்டாவுக்கு ப.சி. நச் கேள்வி
டெல்லி: எல்லையில் 5 ஆண்டுகளில் 2,264 முறை சீனா ஊடுருவல்களை மேற்கொண்டிருப்பது குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்பீர்களா? என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி நடத்திய அனைத்து கட்சிக் கூட்டம் விவாதப் பொருளானது.
சீனா ஆக்கிரமிப்பு- உண்டு, இல்லை என ஏன் மோடி அரசால் பதில் சொல்ல முடியவில்லை? வெளுக்கும் ப.சி.
மோடி குறித்து மன்மோகன்சிங் விமர்சனம்
இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் மோடி முதலில் கூறியிருந்தார். ஆனால் இதனை மத்திய அரசு மறுத்திருந்தது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், மோடி தவறான தகவல்களை தருகிறார்; இது சரியான தலைமைக்கு உகந்தது அல்ல என விமர்சித்திருந்தார்.
ஜேபி நட்டா பதில்
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 43 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேலான பகுதியை எந்த ஒரு எதிர்ப்புமே இல்லாமல் சீனாவுக்கு தாரை வார்த்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மன்மோகன்சிங். 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் 600 முறை சீனா ஊடுருவியது என்றும் ஜேபி நட்டா கூறியிருந்தார்.
சிதம்பரம் கேள்வி
ஜே.பி. நட்டாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் பதில் அளித்திருக்கிறார். அதில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 600 முறை சீனா ஊடுருவியது குறித்து மன்மோகன்சிங் விளக்கம் தருவாரா? என கேட்டிருக்கிறார். ஆம். சீனா ஊடுருவியதுதான்.. ஆனால் சீனாவால் எந்த ஒரு இந்திய நிலப்பரப்பும் ஆக்கிரமிக்கப்படவில்லை. வன்முறை மோதல்களில் இந்திய வீரர்கள் யாருடைய உயிரும் பறிக்கப்படவும் இல்லை என ப. சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
|
5 ஆண்டுகளில் 2,264 முறை சீனா ஊடுருவல்
மேலும், 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 2,264 முறை சீனா ஊடுருவியுள்ளது. இதுபற்றி பிரதமர் மோடியிடம் ஜே.பி. நட்டா கேள்வி எழுப்புவாரா? என்றும் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக்கில் ராணுவ கமாண்டர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்ட விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அவை சீனா ஊடுருவியிருப்பதையே வெளிப்படுத்துகிறது என்றும் ப. சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.