அஸ்ஸாம் முதல்வர் யார்? இன்னமும் முடிவுக்கு வராத பாஜகவின் டெல்லி பஞ்சாயத்து!
டெல்லி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதும் பாஜகவில் யார் முதல்வர் என்கிற பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பாக முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கும் ஹிமந்த பிஸ்வா ஷர்மா, டெல்லியில் முகாமிட்டு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
126 எம்.எல்.ஏக்களை அஸ்ஸாம் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
நடக்காத ஓட்டு ஸ்விங்.. மோடி, அமித் ஷா முட்டி மோதியும்.. மேற்கு வங்கத்தில் பாஜக தோற்றுப்போனது ஏன்?
இருப்பினும் முதல்வர் யார் என்பதை பாஜக அறிவிக்காமல் உள்ளது. இதனால் அஸ்ஸாமில் பாஜக ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டு
அஸ்ஸாம் மாநில முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவால், கட்சியின் மூத்த தலைவர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி உருவாகி உள்ளது. அஸ்ஸாமில் பாஜக வெல்வதற்கு ஹிமந்த பிஸ்வா ஷர்மா முக்கியமான காரணம். அதனால் தமக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என எதிர்பார்க்கிறார் ஹிமந்த.
டெல்லிக்கு அழைப்பு
ஆனால் ஏற்கனவே முதல்வராக இருந்த தமக்கே மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என்கிறார் சர்பானந்த. இந்த அக்கப்போருக்கு முடிவு காண முடியாமல் டெல்லி பாஜக மேலிடம் திணறிவருகிறது. இதனையடுத்தே இருவரையும் டெல்லிக்கு பாஜக தலைவர்கள் அழைத்துள்ளனர்.
அமித்ஷா, நட்டாவுடன் ஆலோசனை
டெல்லி சென்ற ஹிமந்த பிஸ்வா ஷர்மா, ஜேபி நட்டாவையும் அமித்ஷாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா. அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனால் அஸ்ஸாம் பாஜக உடையும் நிலையும் உருவாகலாம்.
என்ன நடக்கும்?
அதனால்தான் ஹிமந்த பிஸ்வா ஷர்மாவையும், சர்பானந்த சோனாவாலையும் உடனே டெல்லிக்கு வர உத்தரவிட்டது பாஜக மேலிடம். இருவரையும் சமாதானப்படுத்தும் வகையில் துணை முதல்வர் பதவி கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல் சர்பானாந்தவே மீண்டும் முதல்வரானால் ஹிமந்த ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் தரப்படலாம் என கூறப்படுகிறது. டெல்லி பாஜக மேலிடத்தின் இந்த இறுதிகட்ட சமாதான முயற்சிகளில் வெல்லப் போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.