தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் என்ஆர்சியை தூசி தட்டும் அஸ்ஸாம் பாஜக அரசு
டெல்லி: அது, 1979ம் ஆண்டு. வடகிழக்கு மாநிலமான அசாமில் மாபெரும் மாணவர் புரட்சி ஒன்று வெடித்தது. அசாமில் குடியேறிய பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.. அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது போராட்டம் நடத்திய "அனைத்து அசாம் மாணவர்கள் சங்கத்தின்" கோரிக்கையாக இருந்தது.
அதிலும் குறிப்பாக.. அண்டை நாடான, வங்கதேசத்திலிருந்து நிறையபேர் அசாமில் சட்ட விரோதமாக குடியேறிவிட்டதாகவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதும் இவர்கள் கோரிக்கையாக இருந்தது.
கோவிஷீல்டு டோசேஜ் இடைவெளி.. 12-16 வாரங்களாக அதிகரிக்க பரிந்துரை.. வல்லுநர்கள் முடிவுக்கு காரணம் என்ன
இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீயில் நெய் ஊற்றியது போல வளர்ந்தது. போராட்டம் தொடர்ந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் இந்த போராட்டத்திற்கு முடிவுகட்ட முன்வந்தன.
அஸாம் ஒப்பந்தம்
1980 முதல் 1983ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் மட்டத்தில் மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்திராகாந்தி மறைவிற்கு பிறகு ராஜீவ் காந்தி பிரதமர் ஆனபிறகும் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து, இறுதியாக 1985ஆம் ஆண்டு, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு அஸ்ஸாம் ஒப்பந்தம் (Assam Accord 1985) என்று பெயரிடப் பட்டிருந்தது.
ஒப்பந்த அம்சம் இதுதான்
இந்த ஒப்பந்தத்தின்படி, 1971ம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிக்கு முன்பாக, வாக்காளராக பதிவு செய்தவர்கள், அல்லது அவ்வாறு பதிவு செய்தவர்களின் வாரிசுகள், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிறந்த சான்றிதழ்கள், சொத்து சான்றிதழ்கள் போன்றவை, குறிப்பிட்ட இந்த தேதிக்கு முன்பாக வாங்கப்பட்டவையாக இருந்தால் அதுவும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும். 1951ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தது. இந்த குடிமக்கள் பதிவேடு திட்டத்தில், அசாம் ஒப்பந்தத்தின்படி 1971ம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதிக்கு முன்பாக அந்த மாநிலத்தில் வசித்தவர்கள் குடிமக்களாக கருதப்படுவார்கள்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில்தான் தேசிய குடியுரிமை பதிவேடு புதுப்பிக்கப்பட வேண்டும், சரிபார்க்க வேண்டும் என்று கோரி 2009ம் ஆண்டு அபிஜித் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 2016ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மூன்று கோடியே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டி இருப்பதால் இது நீண்ட பணி என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. எனவே முதலாவது வரைவு பதிவேடு 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
40 லட்சம் பெயர்கள் இல்லை
2018ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி இரண்டாவது வரைவு பட்டியல் வெளியானது. இதில் 2.89 கோடி குடிமக்கள் இந்தியக் குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 40 லட்சம் மக்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே அவர்கள் சட்டபூர்வ குடிமக்களாக கருதப்படாமல் வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களுடைய பெயர் நீக்கப்படும் நிலை உருவானது. மக்களிடையே கடும் கொந்தளிப்பு உருவானது. அதேநேரம், இந்த பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்து தங்களை பட்டியலில் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு கூறியது. தவறுதலாக யாருடைய பெயராவது பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தால் அதை நீக்குவதற்காக தகவல்களை தெரிவிப்பதற்கும் மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மறு ஆய்வு செய்ய வலியுறுத்திய பாஜக
இதையடுத்து 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி பட்டியலை வெளியிட்டது தேசிய குடிமக்கள் பதிவேடு. அதில் 19 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் கருதப்படுவார்கள். இதையடுத்து, தாங்கள் இந்திய குடிமக்கள்தான் என்றும் தங்களது பெயர் அறியாமல் விடப்பட்டு உள்ளது என்றும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு விண்ணப்பித்தனர். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று தேசிய குடிமக்கள் பதிவேடு கூறினாலும், இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலோ, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திலோ வழக்கு தொடர அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அங்கும் தங்களை இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க முடியாமல் போனால், அவர்கள் தடுப்பு மையங்களில் கொண்டு சென்று வைக்கப்படுவார்கள் என்பதால் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் விடுபட்ட மக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில்தான் அசாம் மாநில பாஜக மீண்டும் இந்த பட்டியலை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது அசாம் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, இறுதிப் பட்டியல் வெளியானது முதலே இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்.
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக, அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் சர்மா இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தின் இறுதி பட்டியல் மற்றும் வரைவு பட்டியல்களில் முறைகேடுகள் இருப்பதாக தெரிகிறது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தகுதியற்ற நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.. உண்மையான குடிமக்கள் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன என்று இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது மனுவில் இடம் பெற்றுள்ள கோரிக்கையாகும்.
கண்காணிப்பு கமிட்டி தேவை
ஒவ்வொரு மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் நியமிக்கும் பிரதிநிதி அடங்கிய கண்காணிப்பு கமிட்டி இந்த மறு ஆய்வு பணிகளை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும், நாட்டின் நலனுக்காக தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. அசாம் மாநிலம் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச எல்லைகளில் அமைந்துள்ள ஒரு மாநிலம். எனவே, எல்லைப்புற பிராந்திய ஒருமைப்பாடு, உள்நாட்டு அமைதி மற்றும் நிலையான தன்மை ஆகியவற்றிற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பில் நடந்துள்ள முறைகேடுகள் சரி செய்யப்பட வேண்டியது அவசியம். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் போலி ஆவணங்களை பலர் சமர்ப்பித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதன்மையான ஆவணங்களை உருவாக்குவதற்காக இவர்கள் மோசடியாக செய்த இரண்டாம் வகை ஆவணங்கள் தொடர்பான விவரங்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உதாரணத்துக்கு.. வாக்காளர் அடையாள அட்டையில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது போல போலியான விவரங்களை அளித்தால், அதை பேக்-என்ட், மறு ஆய்வு மூலமாக கண்டுபிடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், வேறு சில மோசடி ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கு முடியாத சூழ்நிலை இருக்கிறது. எனவே, மொத்தமாக இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான ஆவணங்களை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தேர்தல் முடிந்ததும்
2019ம் ஆண்டு ஜூலை மாதம், அசாம் அரசும், மத்திய அரசும், என்ஆர்சி மறு சரிபார்ப்புக்கு அனுமதியளிக்க உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தன, ஆனால் மாநிலத்தில் மறு ஆய்வு நடத்திய பிரதீக் ஹஜேலா, 27% பெயர்கள் ஏற்கனவே மீண்டும் சரிபார்க்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் பதில் சமர்ப்பித்தார். எனவே, அரசு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற அசாம் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பாஜக தனது தேர்தல் அறிக்கையில், என்.ஆர்.சியில் திருத்தம் செய்வதற்கான முயற்சியை மேற்கொள்ளப்போவதாகக் கூறியது. அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன்தினம், ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தனது அரசு, தேசிய குடிமக்களின் பதிவேட்டை மீண்டும் ஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று கூறினார். இந்த நிலையில், இன்று, இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார்.