2014 போல இருக்காது 2019.. பாஜக ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தாக வேண்டும்!
Recommended Video
டெல்லி: ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் கிராமப்புறங்களில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நகரங்களிலும் கூட அந்தக் கட்சிக்கு பெரும் அடி கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாமல் நகர்ப் புறங்களிலும் கூட இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் இழப்பு எதிர்பார்த்ததுதான் என்றாலும் கூட நகரங்களிலும் கூட கணிசமான அளவுக்கு அதற்கு சரிவு ஏற்பட்டிருப்பது பாஜகவினரை கவலை கொள்ளச் செய்வதாக உள்ளது. காரணம் முக்கியமான இந்தி மாநிலங்கள் இவை. இங்கேயே இந்த அடி கிடைத்தால் பிற மாநிலங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
[பாஜக பெரிதும் நம்பிய நகர்ப்புறங்களும் கைவிட்டன.. லோக்சபா தேர்தலில் காத்திருக்கும் அடி.. இதை பாருங்க ]
2013 தேர்தலில்
சட்டிஸ்கர் மாநிலத்தில் கடந்த 2013 தேர்தலில் 49 இடங்களில் பாஜக வென்றது. ராஜஸ்தானில் 163 இடங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 165 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.
மோடி அலையுடன்
2014ல் வீசிய மோடி அலையும் சேர்ந்து கொள்ள இந்த மூன்று மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 65 எம்.பி தொகுதிகளிலும் 62 தொகுதிகளை அது வென்று அசத்தியது. ஆனால் தற்போது இதில் பெரிய ஓட்டை விழுந்துள்ளதாக கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் டாக்டர் சந்தீப் சாஸ்திரி.
பெரிய ஓட்டை
இதுகுறித்து அவர் கூறுகையில் பாஜகவுக்கு இந்த 3 மாநிலங்களிலும் கிராமப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. இந்த மாநிலங்களில் கிராமப்புறங்கள்தான் அதிகம் என்பதால் பாஜகவுக்கு இழப்பும் அதிகமாகும். குஜராத்தில் நகர்ப்புறங்கள் அதிகம். எனவே பாதிப்பு பெரிதாக இருக்காது. ஆனால் இந்தி மாநிலங்களில் கிராமங்கள்தான் அதிகம். எனவே இழப்பும் அதிகமாகும்.
விவசாயிகள் அதிகம்
மேலும் இந்தி பேசும் மாநிலங்களின் கிராமங்களில் விவசாயிகள் அதிகம். அவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த அதிருப்திதான் தற்போது பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளது. எனவே விவசாயிகளின் ஆதரவை பாஜக தக்க வைக்க வேண்டியது அவசியமாகும்.
நகரங்களிலும்
தற்போது பாஜகவின் பெரிய கவலை என்னவென்றால் ஊரகப் பகுதிகளில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் கூட பாஜகவுக்கு இந்த முறை சரிவு ஏற்பட்டுள்ளது. 2013 தேர்தலில் நகர்ப்புறங்களில் பாஜகவுக்கு சிறப்பான வெற்றி கிடைத்தது. ஆனால் தற்போதைய தேர்தலில் அதில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
சரிவு
மத்தியப் பிரதேசத்தில் 2013 தேர்தலில் நகர்ப்புறங்களில் 90 சதவீத இடங்களை வென்ற பாஜக தற்போது 55 சதவீத இடங்களை மட்டுமே வென்றுள்ளது. சட்டிஸ்கரில் இது 75 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைந்துள்ளது. ராஜஸ்தானில் 95 என்பதிலிருந்து 63 சதவீதமாக சரிந்து விட்டது.
அஸ்திவாரம் ஆடுது
இந்தி பேசும் மாநிலங்களில் நகர்ப்புற வாக்குகள்தான் பாஜகவுக்கு முக்கியமானது. அதிலேயே ஓட்டை விழுந்திருப்பது அக்கட்சியினரை அதிர வைத்துள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் பிற வகுப்பினரும் கூட பாஜக மீது கடும் அதிருப்தியுடன் இருப்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது.
ரொம்ப கஷ்டம்
2014 லோக்சபா தேர்தலில் பாஜக இங்கெல்லாம் பெற்ற வெற்றியை 2019 தேர்தலில் எதிர்பார்ப்பது கடினம். எனவே தற்போதைய தவறுகளிலிருந்து அது திருந்தி வந்து கடுமையாக உழைத்தால் மட்டுமே 2019 தேர்தலிலும் இந்த மாநிலங்களில் அற்புதத்தை எதிர்பார்க்க முடியும் என்று கூறுகிறார் சாஸ்திரி.