ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் - சோதனைக்குட்படுத்தப்பட்டவருக்கு உடல் நலக்குறைவு!
கொரோனா தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவினை
டெல்லி: ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்ட பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் பங்கேற்றவருக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. சோதனையில் பங்கேற்றவருக்கு விளக்க முடியா பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஆஸ்ட்ராசெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 2.77 கோடி பேரை பாதித்துள்ளது. 2 கோடி பேர் வரை குணமடைந்துள்ளனர். 9 லட்சம் பேர் வரை மரணமடைந்துள்ளனர். உலகில் பல முன்னணி நாடுகளும் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கவும் தயாரிக்கவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.
புனேவில் துவங்கியது...ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் தடுப்பு மருந்து...மனித பரிசோதனை!!
ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனெகா மருந்து
முதல் இரண்டு கட்ட சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து வந்த ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா உட்பட 30,000 பங்கேற்பாளருக்கு சோதனை செய்யும் 3ஆம் கட்ட சோதனை நிலைக்கு வந்ததையடுத்து இந்த தடுப்பூசி மருந்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
பக்கவிளைவினால் நிறுத்தம்
கிட்டத்தட்ட அந்த தடுப்பூசி இறுதிக் கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார இணையதளமான ஸ்டாட் நியூஸ் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி சோதனை நிறுத்தம்
தடுப்பூசியின் பாதுகாப்பு விவகாரத்தை முன்னிட்டு சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்த இணையதளம் ஆஸ்ட்ரா செனெகா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மக்களிடம் சோதனை செய்யும் அளவுக்கு இந்த தடுப்பூசி வளர்ந்து வந்தது. இந்நிலையில் விவரிக்க இயலாத பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை நிறுத்தம்
இந்நிலையில் விளக்க முடியா பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனெகா கூறியிருப்பதாக ஸ்டாட் நியூஸ் இணையதளம் தெரிவிக்கிறது. ரேண்டம் முறையில் தன்னார்வலர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையை நிறுத்தியுள்ளோம். பாதுகாப்பு தரவுகள் குறித்து எங்களின் தன்னிச்சை குழு ஆய்வு செய்ய உள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பங்கேற்பாளர் குணமடைந்து வருவதாகவும் ஸ்டாட் நியூஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனையில் பாதிப்பு
மருத்துவ பரிசோதனையின் போது , விவரிக்க முடியாத உடல் நலக்குறைவு பிரச்சினை ஏற்படும் போது இத்தகைய நடைமுறைகள் கையாளப்படுவது வழக்கமான ஒன்றுதான். பெரிய அளவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் போது, எதேச்சையாக சில சமயங்களில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த பிரச்சினைகளை தன்னிச்சையாக கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
உடல் நலக்குறைவு
பக்கவிளைவு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தன்னார்வலர் எங்கு உள்ளார். எத்தகைய உடல் நலப்பிரச்சினை ஏற்பட்டது என்பன போன்ற எந்த தெளிவான விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இரட்டைத் தடுப்பு கூறுகள் கொண்டது என்று கூறப்படுகிறது, அதாவது கிருமி எதிர்ப்பான்களை உற்பத்தி செய்வதோடு வைரஸ் அழிப்பு டி செல்களையும் உற்பத்தி செய்கிறது என்று ஆரம்பக்கட்டத்தில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு உறுதிமொழி
உலகச் சுகாதார அமைப்பின் தகவலின் படி தற்போது சுமார் 180 தடுப்பூசிகள் தயாரிப்பில் உள்ளன, ஆனால் இவை எதுவும் கிளினிக்கல் சோதனைக்கு இன்னமும் உட்படுத்தப்படவில்லை. ஆஸ்ட்ராசெனெகா, ஃபைசர், கிளாக்சோ ஸ்மித்கிளைன் உள்ளிட்ட தடுப்பூசி தயாரிப்பு மருந்து நிறுவனங்கள், அரசியல் நெருக்கடியிலும் பாதுகாப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுள்ளன. இந்த உறுதி மொழியை ஏற்ற மற்ற நிறுவனங்கள், ஜான்சன் அன் ஜான்சன், மெர்க், மாடர்னா, நொவாவாக்ஸ், சனோஃபி, பயோ என் டெக் ஆகிய நிறுவனங்களும் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.