ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் தேவையை அதிகரிக்க புதிய வழிகளை ஆராயுமாறும் இன்று நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் தேவைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
குட் நியூஸ்.. அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.. மே 1 முதல் சிறப்பு முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு
ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், அதிகரிக்கும் கொரோனா வழக்குகள் மருத்துவமனைகள் உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு ஆகியவை குறித்து விவாதிக்கப் பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆக்சிஜன் தேவை
இதில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது, விநியோகத்தை வேகப்படுத்துவது ஆகியவற்றில் விரைவாகச் செயல்பட வேண்டிய அவசியம் குறித்து மோடி பேசியதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தேவையை அதிகப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
162 புதிய ஆலைகள்
நாட்டில் தற்போது தினசரி ஆக்சிஜன் தேவை 3,300 மெட்ரிக் டன் வரை அதிகரித்துள்ளதாகவும் நிலைமை சமாளிக்கத் தொழிற்சாலைகள் ஆக்சிஜனை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நாடு முழுவதும் புதிதாக 162 ஆலைகளைச் செயல்படுத்தவும் விரைவில் அனுமதி அளிக்கவுள்ளதாகப் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதுக்கினால் நடவடிக்கை
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் சீராக, தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆக்சிஜன் விநியோகத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து சிக்கலைச் சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க புதிய வழிகளை ஆராயுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டனர். ஆக்சிஜனை பதுக்குபவர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.