ரிசல்ட்டுக்கு முன்பே 39 கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு.. வளைத்து காட்டிய அமித்ஷா
டெல்லி: பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்ப்பு அலைகள் இருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் கூறியிருந்தன.
ஆனால் பாஜக தலைவர் அமித்ஷா நேற்று வழங்கிய, இரவு விருந்து நிகழ்ச்சியில் 36 கூட்டணி கட்சிகள் பங்கேற்றதோடு, மூன்று கட்சிகள் ஆதரவு கடிதம் அளித்துள்ளன.
டெல்லியில் உள்ள அசோகா, நட்சத்திர ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்ற டின்னர், நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.
ராஜ்நாத்சிங் பேட்டி
இது பற்றி நிருபர்களிடம் மூத்த அமைச்சரான ராஜ்நாத் சிங் கூறுகையில், நரேந்திர மோடி தனது ஆட்சிக்காலத்தில், வரலாற்று சிறப்புமிக்க பல முடிவுகளை அறிவித்துள்ளார். இதற்காக அனைத்து கூட்டணி கட்சிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நன்றி தெரிவிப்பு
தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சியினருக்கு அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளுக்கு எங்கள் கூட்டணி சார்பில் கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
39 கட்சிகள் ஆதரவு
மேலும், இந்த கூட்டத்தில் 36 கூட்டணி கட்சியினர் பங்கேற்றதோடு, மூன்று கூட்டணி கட்சியினர் தங்கள் பிரதிநிதிகளை அனுப்ப இயலவில்லை என்றும் ஆனால் பாஜகவிற்கு, தங்களது ஆதரவு என்றும் கடிதம் அனுப்பி உள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
|
தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம்
தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நரேந்திர மோடி வெளியிட்ட புகைப்பட தகவலில், இதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பம் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் வேற்றுமை தன்மையை எடுத்துக் காட்டுவதைப் போல இந்த கூட்டணி அமைந்துள்ளது. பிராந்திய அளவிலான தேவைகளை பூர்த்தி செய்வதோடு தேசிய வளர்ச்சிக்கான சிறப்பான கூட்டணி எங்களுடையதுதான் என்று மோடி அதில் தெரிவித்துள்ளார்.