கெஜ்ரிவால் அமைச்சரவையில் 7 பேரில் இருவர் நீக்கம்? அதிஷிக்கும் ராகவுக்கும் அமைச்சர் பதவியா?
டெல்லி: ஆம் ஆத்மி தலைவர்கள் அதிஷியும் ராகவ் சத்தாவும் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெறுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஏற்கெனவே இருந்த 7 அமைச்சர்களையும் அப்படியே வைத்துக் கொள்ள போவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபாரமாக பணியாற்றி வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மியும் 8 தொகுதிகளில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி சார்பில் களமிறக்கப்பட்ட 9 பெண்களில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் அடிஷி. 38 வயதாகும் இவர் கல்வித் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு ஆலோசகராக இருந்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
அது போல் ராகவ் சத்தாவும் நிதித் துறை ஆலோசகராக இருந்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள். கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் ஈடுபட்டுள்ளனர்.
கல்காஜியில் போட்டியிட்ட அடிஷி தன்னை எதிர்த்து போட்டியிட்ட தரம்பீர் சிங்கை 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் கவுதம் காம்பீரை எதிர்த்து கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் அடிஷி.
கல்காஜி தொகுதி கல்வி தொடர்புடைய தொகுதி என்பதால் ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்த அவதார் சிங் கல்காவுக்கு பதிலாக அடிஷிக்கு ஆம் ஆத்மி வாய்ப்பு கொடுத்தது.
எனவே அதிஷி, ராகவ் ஆகியோரின் பணிகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இவர்களுக்காக ஏற்கெனவே இரு்நத 7 அமைச்சர்களில் இருவர் நீக்கப்படுவர் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அது போல் ஒரு எண்ணம் கெஜ்ரிவாலுக்கு இல்லை என்றே அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே கடந்த முறை இருந்த 7 அமைச்சர்களும் நிச்சயம் இந்த முறை எந்த மாற்றமுமின்றி அப்படியே இடம்பெறுவர் என தெரிகிறது. வரும் 16-ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் 3ஆவது முறை முதல்வராக பதவியேற்கிறார். இந்த அமைச்சரவை அப்படியே இந்த முறையும் தொடர்ந்தால் புதிய அரசில்
அரவிந்த் கெஜ்ரிவால்
மணீஷ் சோடியா
சதேந்திரா ஜெயின்
கோபால் ராய்
கைலாஷ் கெலாட்
இம்ரான் ஹுசைன்
ராஜேந்திர பால் கவுதம்
ஆகியோர் இடம்பெறுவர். இவர்களது துறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இதுகுறித்து அடிஷியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது கட்சி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.