அது விரக்தி பேச்சு..நல்லதுக்காகவே சொன்னார்.ரஞ்சன் கோகோய் மீதான நடவடிக்கைக்கு மறுத்த அட்டர்னி ஜெனரல்
டெல்லி: உச்சநீதிமன்றம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் மறுத்துவிட்டார்.
பிப்ரவரி முதல் வாரத்தில், இந்தியா டுடே சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் பங்கேற்றார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், "மக்கள் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காகச் சென்றுவிட்டால், ஏன் நீதிமன்றத்துக்கு வந்தோம் என்று புலம்பும் அளவுக்கு வேதனைப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கியுள்ளன. நீதிமன்றம் சீர்குலைவை நோக்கி பயணிக்கிறது.
நீதிமன்றத்துக்கு நான் சென்றால், எனக்குத் தீர்ப்பு கிடைக்காது. அதற்காக நான் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும். இதைக் கூற எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நீதிமன்றத்துக்குச் சென்றால் வேதனைப்பட வேண்டியிருக்கும்" எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாகவும், அதன் கண்ணியத்தை பொதுமக்களின் மத்தியில் குறைத்துவிட்டதாகவும், அவர் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்வலர் சாகேத் கோகலே கோரியிருந்தார்.
இந்த சூழலில், அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், கோகலேவுக்கு எழுதிய கடிதத்தில், நீதிபதி கோகோயின் அறிக்கைகள் உண்மையில் "மிகவும் வலுவானவை" என்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் அது "நீதிமன்றத்தின் நன்மைக்காக" கூறப்பட்டது. மேலும் "எந்த வகையிலும் நீதிமன்றத்தை அவதூறு செய்யவோ அல்லது அதன் அதிகாரத்தை பொதுமக்களின் பார்வையில் குறைக்கவோ இல்லை. அவரது பேச்சு நீதி வழங்கல் முறையில் உள்ள அவரது ஆழ்ந்த விரக்தியை பிரதிபலிக்கின்றன" என்று வேணுகோபால் தனது கடிதத்தில் விளக்கினார்.
இறுதியில், "நீதிமன்ற அவமதிப்பு சட்டம், 1971 இன் பிரிவு 15 இன் கீழ் குற்றவியல் அவமதிப்புக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான ஒப்புதலை நான் மறுக்கிறேன் ..." என்று வேணுகோபால் தனது கடிதத்தை நிறைவு செய்தார்.