கங்கையை சுத்தப்படுத்த இணைந்த கைகள்.. 5000 கி.மீ டிரெக்கிங்.. அசத்தல் திட்டம்
டெல்லி: கங்கை நதி என்பது இந்தியாவின் கலாச்சாரத்தோடு தொடர்பு கொண்டது. மக்களின் தாகத்தைத் தீர்க்கிறது, உணவுத் தேவைக்கான தண்ணீரை வழங்கி உற்பத்தியை பெருக்குகிறது. உயிர் வாழும் காலங்களில் இத்தனை நன்மைகளை செய்யும் கங்கை நதியே இறுதியில் மனிதனின் அஸ்தியை கரைக்கும் இடமாகவும் பயன்படுகிறது. ஆனால் இத்தனை சிறப்புமிக்க கங்கை நதி தற்போது குப்பை கூளம் போல காட்சியளிக்கிறது.
கங்கை நதியின் தூய்மையை மீட்டெடுப்பதற்காக ராணுவ அதிகாரிகள் ஒன்றிணைந்து கைகோர்த்துள்ளனர்.
அதுல்ய கங்கா என்ற பெயரில் கங்கை நதியை சீர்படுத்தும் திட்டத்தை இவர்கள் கையில் எடுத்துள்ளனர். லெப்டினன்ட் கர்னல் ஹெம் லோஹுமி, கோபால் சர்மா, கர்ணல் மனோஜ் கேஸ்வர், ஆகியோர் இணைந்து இந்த முன்னெடுப்பை துவங்கியுள்ளனர்.
கர்ணல் மனோஜ் கேஸ்வர் இதுபற்றி கூறுகையில், கங்கை நதி பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. கடந்த 1500 ஆண்டுகளாக இந்த விழிப்புணர்வுக்கு பஞ்சம் நிலவி வருகிறது. வேத காலத்தின் போது கங்கை நதிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பிற்காலத்தில் அதை நமது மக்கள் மறந்து விட்டனர். இப்போது இந்த நாட்டின் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் அதுல்ய கங்கா திட்டத்தின் நோக்கமாகும். அதுல்ய கங்கா ஒரு வித்தியாசமான தனித்துவமான முன்னெடுப்பு. ஏனெனில் வெறுமனே நதி சுத்தப்படுத்துதல் என்பதோடு மட்டுமின்றி சாகசம், வரலாறு, பாரம்பரியம் உள்ளிட்ட பல அம்சங்களும் கங்கை நதியுடன் இணைந்து உள்ளன. கங்கை நதியை ஒட்டி சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு டிரக்கிங் செய்யும் திட்டம் இதுவாகும். உலகத்திலேயே மிகவும் நீளமான டிரக்கிங் இதுவாக இருக்கும்.
கங்கை நதியை சுத்தப்படுத்துவது மத்திய அரசின் பணி ஆகும். உண்மையில் அவர்கள்தான் சுத்தப்படுத்துகிறார்கள். நிலைமையை உணர்ந்து கொண்டு துரிதமாக அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர். எங்களுடைய பணி இளைஞர்கள் மத்தியில் நதியை சுத்தப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். கங்கை நதி மட்டும் கிடையாது, இந்த நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் சுத்தப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் அதுல்ய கங்கா திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதுல்ய கங்கா திட்டம் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி முறைப்படி தொடங்கி, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ம் தேதி நிறைவடைகிறது. அத்தோடு கிடையாது. இது மொத்தம் 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடக்கக் கூடிய ஒரு திட்டம். 5 ஆயிரம் கிராமங்கள் 45 நகரங்கள் ஆகிய பகுதிகளை 220 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முழுமை செய்ய இந்த குழு திட்டமிட்டுள்ளது.
இந்த டிரகிங்கில் நிறைய பேரை பயன் படுத்துவதாக இருந்தது ஆனால் கொரோனா காலத்தை முன்னிட்டு 6 நிரந்தர நடையாளர்கள், 150 ரிலே நடையாளர்கள், 20000 மினி நடையாளர்கள், பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு 5 கிலோ மீட்டரிலும் நிலத்தடி நீர், கங்கை நீர், மணல் ஆகியவற்றின் தரம் சோதித்து பார்க்கப்படும்.
உதாரணத்துக்கு போஜ்பூர் பகுதியை எடுத்துக் கொள்ளலாம். அங்கு நாட்டின் பிற பகுதிகளை விட பத்து மடங்கு அதிகம் புற்று நோயாளிகள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் தண்ணீர் மாசுபாடு. இதன் காரணமாக, ஏற்பட்ட நிலத்தடி நீர் மாசுபாடு ஆகியவைதான். இதுபற்றியெல்லாம் முழு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கு அதுல்ய கங்கா திட்டம் பயன்படும். கங்கை நதியை போல நமது வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மற்றொரு நதியை பார்ப்பது அரிது. எனவே, இதை காப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு நாடு முழுக்க இளைஞர்கள் ஆதரவு கரம் நீட்ட தொடங்கியுள்ளனர்.