ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பேரம்...சிக்கியது ஆடியோ...மறுக்கிறார் அமைச்சர்!!
டெல்லி: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரிலால் சர்மா, பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக இரண்டு ஆடியோக்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா இன்று வெளியிட்டு இருந்தார்.
இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை என்று அமைச்சர் கஜேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கஜேந்திர சிங் கூறுகையில், ''இது என்னுடைய குரலே இல்லை. எந்த சஞ்சய் ஜா பற்றி அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அந்தப் பெயரில் பலரும் உள்ளனர். நான் அவர்களிடம் பேசி இருந்தால், என்னுடைய தொலைபேசி எண் பதிவாகி இருக்க வேண்டும். விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பேரம் நடத்தியதாக இரண்டு ஆடியோவை வெளியிட்டு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா இன்று பேசுகையில், ''இந்த ஆடியோக்களில் பதிவாகி இருக்கும் குரல்கள் பாஜக தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஜெயின். மத்திய அமைச்சர் கஜேந்திர சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரிலால் சர்மா ஆகியோருடையது. இவர்கள் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை நீக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது இந்திய ஜனநாயக வரலாற்றின் கருப்பு அத்தியாயம்.
பெங்களூரில் இன்னும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்கனும்.. மாநகராட்சி பிடிவாதம்..எடியூரப்பா முடிவு என்ன?
சதி வேலையில் ஈடுபட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மத்திய அமைச்சர் என்ற போர்வையில் விசாரணையில் குறுக்கீடு செய்ய நினைத்தால் அவரை கைது செய்ய வேண்டும். அதேபோன்ற நடவடிக்கையை மற்ற இருவர் மீதும் எடுக்க வேண்டும்.
இவர்கள் தவிர காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்த மற்ற எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.