9 மாநில கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் - மத்திய அரசின் ஷாக் ரிப்போர்ட்!
டெல்லி: இந்தியாவில் 9 மாநிலங்களின் கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. இதனை avian influenza என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். பறவைகளிடமிருந்து நேரடியாக மனிதர்களைத் தாக்கும் இந்த தொற்றின் அறிகுறியாக காய்ச்சல், மூச்சுத் திணறல், தசைப் பிடிப்பு, வயிற்றுப்போக்கு, இருமல் , தொண்டை வலி போன்றவை இருக்கும்.
இந்நிலையில், இதுவரை கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரகண்ட், குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஒன்பது மாநிலங்களின் கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு இந்தியாவின் ஆறு மாநிலங்களில் மட்டும் பரவியிருந்த பறவைக் காய்ச்சல் இப்போது 9 மாநிலங்களில் பரவி இருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா எனும் இந்த தொற்று 12 மாநிலங்களில் காகங்கள், புலம் பெயர்ந்த பறவைகள் மற்றும் இதர வன பறவைகளிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய 12 மாநிலங்கள் இதில் அடங்கும்.
பிரசாந்த் கிஷோர் டைரக்டர்...ஸ்டாலின் நடிகர்...சொல்வது எடப்பாடியார்
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பறவைகளின் சுவாச மற்றும் இரைப்பைக் குழாய்களில் காணப்படுகின்றன, இறைச்சியில் அல்ல. இருப்பினும், எச் 5 என் 1 திரிபு போன்ற அதிக நோய்க்கிருமி வைரஸ்கள் இறைச்சி உட்பட பாதிக்கப்பட்ட பறவையின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகின்றன. அதிக நோய்க்கிருமி ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிக்கப்பட்ட பறவைகள் இடும் முட்டைகளின் உள்ளேயும் மேற்பரப்பிலும் வைரஸ் காணப்படுகிறது.
முன்னதாக, பறவைக் காய்ச்சல் பரவுவதை கருத்தில் கொண்டு, மக்கள் அரை வேக்காட்டில் முட்டை மற்றும் அரைவேக்காட்டில் சமைத்த கோழி இறைச்சிகளை சாப்பிட வேண்டாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான், இந்தியாவின் 9 மாநிலங்களின் கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உஷார் மக்களே!