மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க மோடி அழைப்பு
டெல்லி: கொரோனாவைரஸ் பாதிப்புக்கு எதிராக மார்ச் 22ம் தேதி ஒரு நாள் மக்கள் அனைவரும் இணைந்து சுய ஊரங்கை கடைப்பிடிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மேலும் அதை கட்டுப்படுத்தும் நோக்கோடு, மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இந்தியா எந்த அளவிற்கு உறுதியுடன் இருக்கிறது என்பதை உலகிற்கு காட்டுவதற்கு மக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மிக மிக அத்தியாவசிய தேவைகள் இருந்தால் தவிர வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பணியிலிருந்தால், அதை வீட்டிலிருந்தே செய்ய வேண்டும். மருத்துவர்கள், ஊடகத்தினர், போக்குவரத்து துறையினர் போன்ற அத்தியாவசிய தேவைகளில் இருப்பவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கலாம்.
மக்கள் தனிமைப் படுத்திக் கொள்ளுவது தான் இந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு ஆகச்சிறந்த வழி. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பத்து பேரையாவது தொலைபேசியில் அழைத்து இந்த சுய ஊரடங்கு உத்தரவு பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை செயல்படுத்தி வெற்றி பெற்று காட்டுவோம், என்றும் அவர் தெரிவித்தார்.