அமைதி, ஒற்றுமை முக்கியம்.. இந்து, இஸ்லாமிய தலைவர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு.. முக்கிய ஆலோசனை!
டெல்லி: அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வந்ததை அடுத்து டெல்லி இந்து, இஸ்லாமிய மத தலைவர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு நடத்தினார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
சந்திப்பு நடத்தினார்
இந்த நிலையில் இன்று மதியம் இந்து, இஸ்லாமிய தலைவர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு நடத்தினார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்து, இஸ்லாமிய மதத்தில் இருக்கும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அமைப்புகள்
20க்கு மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர் பெரும் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஷியா பிரிவு இஸ்லாமிய மதகுரு மெளானா கல்பே ஜவாத் பாஜக மூத்த தலைவர் பல்பீர் புஞ்ச், பாபா ராம்தேவ் ஆகியோர் இதில் கலந்து கொண்ட முக்கியமான நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள்
இந்த ஆலோசனை கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடந்தது. மதங்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணுவது எப்படி. அயோத்தி வழக்கில் தீர்ப்பிற்கு பின் என்ன செய்வது. இதற்கு பின் மக்கள் இடையில் அமைதியை நிலைநாட்டுவது எப்படி என்று ஆலோசனை செய்யப்பட்டது.
அயோத்தி வழக்கு
அயோத்தி தீர்ப்பின் மூலம் நாட்டில் அமைதியை சீர்குலைக்க தேச விரோத சக்திகள் முயல்வதை அனுமதிக்க கூடாது. அந்நிய நாட்டின் சக்தியில் இந்திய அரசியலை தீர்மானிப்பதை அனுமதிக்க கூடாது என்று ஆலோசிக்கபட்டது. இந்த ஆலோசனைக்கு பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மத தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
நாட்டில் அமைதி
அதில், மக்கள் இடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பது குறித்து ஆலோசித்தோம். இந்த சந்திப்பு பயன் உள்ளதாக இருந்தது. அமைதியான இந்தியாவிற்கு இதுபோன்ற கூட்டங்கள் உதவும் என்று குறிப்பிட்டனர்.