நீதிபதி விலகல் எதிரொலி.. அயோத்தி வழக்கு விசாரணை ஜன.29க்கு ஒத்திவைப்பு!
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
அயோத்தி வழக்கு இப்போது மீண்டும் பரபரப்பான நிலையை அடைந்து இருக்கிறது. 2019 தேர்தல் வர இருக்கும் நிலையில் மிக சரியாக பாபர் மசூதி வழக்கு மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்றில் இருந்து விசாரணை தொடங்க உள்ளது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை செய்ய தொடங்கி உள்ளது.
ஆர்எஸ்எஸ் கலவரம்
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம்தான் பிரச்சனைக்கு காரணம். இந்த நிலம் தங்களுடையது என்று இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சண்டையிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. மிகப் பெரும் கலவரத்திற்கு இது வித்திட்டது. நாடு முழுக்க இந்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
என்ன தீர்ப்பு
இதன் பாதிப்பு இந்திய அரசியலில் இன்னும் கூட இருக்கிறது. இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ளும்படி கூறியது.அதன்படி சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் நிலத்தை பிரித்துக்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு செய்யப்பட்டது
ஆனால் இந்த தீர்ப்பை மூன்று அமைப்புகளே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கடந்த 2010-ல் வந்த இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தொடங்கி உள்ளது. இன்று தொடங்கும் விசாரணை 2019 மார்ச் மாதம் வரை விசாரணை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஐந்து பேர் அமர்வு
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் அமர்வு வழக்கை விசாரிக்கிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ போப்பே , என்வி ரமணா, யுயு லலித், டிஓய் சந்திரசூட் ஆகியோர் இருந்தனர். ஆனால் விசாரணை தொடங்கும் முன் யுயு லலித் நீதிபதி அமர்வில் இருந்து விலகினார்.
எப்போது விசாரணை
ஏற்கனவே பாபர் மசூதி தொடர்பான நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு ஒன்றில் முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் கல்யாண் சிங் சார்பாக ஆஜரான காரணத்தால் அவர் நீதிபதிகள் அமர்வில் இருந்து விலகினார். இதனால் இன்று அயோத்யா வழக்கில் விசாரணை எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக வழக்கு விசாரணை ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.