அயோத்தி வழக்கு.. சமரச தீர்வை ஏற்படுத்துவதே முக்கியம்.. உச்சநீதிமன்றம் புதிய யோசனை!
அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று முதல் விசாரிக்க உள்ளது.
Recommended Video
டெல்லி: அயோத்தி நில வழக்கில் மனுதாரர்களிடையே சமரச தீர்வை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக நடுநிலையாளர்களை நியமிப்பது பற்றி வரும் செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருக்கிறது.
அயோத்தி வழக்கு மீண்டும் பரபரப்பான நிலையை அடைந்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு பின் இன்று அந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு உள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை தொடங்கி உள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.
தேர்தல் நடக்க உள்ள நேரத்தில் இந்த வழக்கு மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த நிலம் தங்களுடையது என்று இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சண்டையிட்டு வருகிறது.
இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்குதான் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர்.
அந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை தொடங்காமல் இருந்தது. பல நாள் தாமதத்திற்கு பின் இன்று அந்த மேல்முறையீடு மீதான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த அமர்வில் உள்ளனர்.
இன்றைய விசாரணையில் மனுதாரர்களிடையே சமரச தீர்வை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது. இது வெறும் நிலப்பிரச்சனை மட்டும் கிடையாது. அதைவிட இதில் உள் பிரச்சனைகள் நிறைய இருக்கிறது.
அதனால் இதில் சமரச பேச்சுவார்த்தையும் மிக முக்கியம். சமரசம் செய்ய 1% வாய்பு இருந்தால் கூட அது சரியானதாகவே இருக்கும். நீதிமன்றம் அதை பயன்படுத்தும் என்று உச்ச நீதிமன்றம் இதில் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பான மொழிபெயர்ப்புகளை சரிபார்த்து 6 வாரத்தில் அதை உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
2 மதங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே இந்த வழக்கை பார்க்கிறோம். சமரச தீர்வை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராய நடுநிலையாளர்களை நியமிப்பது சரியாக இருக்கும். இது தொடர்பாக நடுநிலையாளர்களை நியமிப்பது பற்றி வரும் செவ்வாய்க்கிழமை முடிவு எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருக்கிறது.
அதோடு வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.