இந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்!
அயோத்தியில் இந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா அமைப்பு வாதிட்டு இருக்கிறது.
டெல்லி: அயோத்தியில் இந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா அமைப்பு வாதிட்டு இருக்கிறது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
என்ன வழக்கு
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று 8வது நாள் அமர்வு விசாரணை நடைபெற்றது. சென்ற அமர்வில், ராம் லல்லா அமைப்பு சார்பாக வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன் இதில் கடுமையான வாதங்களை வைத்தார். அதேபோல் இன்று அவர் தனது வாதத்தில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் சிலைகள் இருந்துள்ளது. அது இஸ்லாம் மதத்தில் நடக்க வாய்ப்பில்லை.
என்ன ஆதாரம்
அந்த பகுதியில் ஆமை, முயல் போன்ற சிறிய சிறிய சிலைகள் இருந்துள்ளது. இஸ்லாம் மதத்தில் இப்படி எல்லாம் சிலைகள் இருக்காது. அவர்கள் சிலையை வழிபட மாட்டார்கள். இதனால் அந்த இடத்தில் இந்து கோவில் இருந்தது உறுதியாகிறது. அதேபோல் அங்கு செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்த ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது.
அகழ்வாராய்ச்சி எப்படி
அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த ஆதாரங்கள் சிலவற்றை நாங்கள் சமர்ப்பித்து இருக்கிறோம். இந்த அகழ்வாராய்ச்சி முடிவுகளை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். பல்வேறு அமைப்புகள் இங்கு அகழ்வாராய்ச்சி சோதனைகளை செய்துள்ளது. இது எங்கள் தரப்பு வாதத்திற்கு வலு சேர்க்கிறது.
மசூதி இடம்
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள்தான் அது. அங்கு இருந்தது ராமர் கோவில்தான். அதை இடித்துவிட்டுதான் அங்கு பாபர் மசூதி கட்டி இருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன் வாதம் செய்துள்ளார்.