1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்
Recommended Video
டெல்லி: 1989 ஆம் ஆண்டு வரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய, நிலத்தை இந்துக்கள் யாரும் உரிமை கோரவில்லை என்று முஸ்லிம்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சன்னி வக்பு வாரியம் தரப்பில் இன்று, வாதிடப்பட்டது.
அயோத்தியில் 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஏற்கனவே ராமர் கோவில் இருந்ததாக இந்து அமைப்பினர் தெரிவித்து வந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி சுமார் ஒன்றரை லட்சம் கரசேவகர்கள் இணைந்து பாபர் மசூதியை இடித்து தள்ளினர்.
இந்த நிலையில்தான் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
உரிமை கொண்டாடவில்லை
இன்றைய தினம் சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞரான ராஜீவ் தவான் முஸ்லீம்கள் தரப்புக்கு ஆதரவாக வாதத்தை முன்வைத்தார். அந்த வாதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 1989ம் ஆண்டு வரை அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்கள் யாரும் உரிமை கொண்டாடவில்லை. எனவே இது பாபர் மசூதியாகத்தான் இருந்தது. 1886ஆம் ஆண்டு ஒரு முறை இந்த இடத்தை இந்துக்கள் உரிமை கொண்டாடிய போது கூட அது மறுக்கப்பட்டது என்பதே வரலாறு.
பழையபடி வேண்டும்
எனவே, 1992ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அதே மாதிரி திரும்பவும் உருவாக்கி தரப்பட வேண்டும்.
1934 ஆம் ஆண்டு முதல் சர்ச்சைக்குரிய இடத்திற்கான உரிமை தங்களிடம் இருந்ததாக நிர்மோகி அகாரா உள்ளிட்ட இந்து அமைப்பினர் தெரிவிப்பது சரியல்ல, அதற்கான ஆதாரமும் இல்லை. இவ்வாறு அவர் வாதிட்டபோது, வழக்கை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் அங்கம் வகிக்கும் நீதிபதி டி.ஒய் சந்திரசூட், குறுக்கிட்டார் "சர்ச்சைக்குரிய இடத்தின் வெளிமுற்றம் இந்துக்கள் வசம் தொடர்ந்து இருந்ததற்கு ஆவணங்கள் உள்ளனவா" என்று கேள்வி எழுப்பினார்.
உரிமை
இதற்கு பதிலளித்த ராஜிவ் தவான், "இந்துக்கள் வெளி முற்றத்தை உரிமை கோர முடியாது. அங்கே, இந்துக்களுக்கு பிரார்த்தனை செய்ய மட்டுமே உரிமை உண்டு, உடைமை இல்லை என்பதைத்தான் ஆவணங்கள் காட்டுகின்றன" என்று வாதிட்டார்.
மீண்டும் குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், வெளி முற்றத்தில் துறவிகள் தங்கியிருந்த ஆதாரம் உள்ளது. உங்கள் தரப்பிலிருந்தும் புகார்கள் வந்தனவே என்றார்.
அனைத்து கேள்விகளும் எங்களுக்கா
இதையடுத்து, ராஜிவ் தவான், "அனைத்து கேள்விகளும் எங்களிடம் (முஸ்லீம்கள் தரப்பு) மட்டுமே கேட்கப்படுகின்றன. அந்த பக்கத்தினருக்கு கேட்கப்படுவதில்லை. இருப்பினும் நாங்கள் பதில் தெரிவித்துதான் வருகிறோம் என்றார். தவானின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த ராம் லல்லா தரப்பு வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியநாதன், "இதுபோன்ற கருத்துக்கள் தேவையற்றவை" என்று தெரிவித்தார். இவ்வாறு வாதம் நடைபெற்றது.