அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் முடிந்தது.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
Recommended Video
டெல்லி: வரலாற்று முக்கியமான அயோத்தி வழக்கில் 40வது நாளான இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தினசரி விசாரணை நடத்தப்படும் விரைவில் முடிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து இருந்தது.
இன்றே கடைசி நாள்
இதன்படி 39 நாட்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். வரும் 18 ஆம் தேதிக்குள் இருதரப்பும் தங்கள் வாதங்களை முடித்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்றே விசாரணைக்கு கடைசி நாளாக இருக்கலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று கூறினார். இதன்படி இன்று இறுதி விசாரணை நடைபெற்றது.
அனுமதி அளிப்பு
அப்போது பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்கனவே போதுமான விசாரணையை நடததிவிட்டோம். அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க நேரம் அளிக்கிறோம் வாதங்க்ளை தொடரலாம் என்றார். இதையடுத்து வாதங்களை அனைவரும் முன்வைத்தனர்.
ஆதாரம் இல்லை
இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடுகையில், வைத்தியநாதன் வாதிடுகையில், ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நீண்ட கால நம்பிக்கை. உலகில் ராம ஜென்ம பூமி அயோத்தியில் மட்டுமே இருக்கிறது. எனவே, அங்கு மட்டுமே இந்துக்களால் ராம ஜென்ம பூமி என்ற பிணைப்புடன் வழிபட முடியும். முஸ்லீம்கள் தொழுகை செய்ய வேறு நிறைய இடங்கள் உள்ளன. குறிப்பிட்ட இந்த இடத்தையே தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. 1857 முதல் 1934 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லீம் தரப்பு வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தியது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. அதன்பிறகு அவர்கள் எந்த பிரார்த்தனையையும் செய்ததற்கான ஆதாரம் இல்லை என்றார்.
ராஜீவ் தவான் ஆவேசம்
இதையடுத்து இந்து அமைப்பினர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிஷோர் குணால் எழுதிய `அயோத்தியா மீள்பார்வை' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன், `இந்த நீதிமன்றம் ஏதோ ஒரு புத்தகத்தை சாட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது எனக்கூறி எதிர்தரப்புஅளித்த புத்தகத்தை கிழித்தார்.
எழுந்து செல்வோம்
ராஜீவ் தவானின் இந்த செயலால் அதிருப்தியடைந்த தலைமை நீதிபதி `மிக முக்கியமான வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் இப்படி நடந்துகொள்வது முறையல்ல. இதேநிலை தொடர்ந்தால் விசாரணையைத் தொடராமல் நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம் என்றார். மேலும் வழக்கறிஞர்கள் கொடுக்கும் எழுத்துபூர்வமான சாட்சியங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதை விடுத்து நீதிமன்றத்தில் குரலை உயர்த்திப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எச்சரித்தார்.
நவ 17க்கு முன் தீரப்பு
இதையடுத்து நீதிபதிகளை சமாதானம் செய்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமரச குழுவும் தங்கள் வாதங்களை தலைமை நீதிபதி அமர்வு முன்பு வைத்தது. அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் அயோத்தி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.