என்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணை இன்று இறுதி கட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்துள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு பெஞ்ச் இந்த வழக்கை ஆகஸ்ட் 6 முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.
விசாரணை அக்டோபர் 17 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. விசாரணை நிறைவடைந்த பின்னர் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த வழக்கில், நாடே எதிர்பார்த்து காத்திருக்கும், இறுதி தீர்ப்பு வெளியாக உள்ளது.
இந்த வழக்கின் முழு விவரம் என்ன? இந்த விஷயம் நாட்டின் உச்சநீதிமன்றத்தை எவ்வாறு அடைந்தது என்பதைப் பார்க்கலாம்.
1. தீர்ப்பு எப்போது?
அயோத்தி வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் தினமும் விசாரித்து வருகிறது. நீதிபதி கோகோய், 2019, 17 நவம்பர் அன்று ஓய்வு பெறுகிறார். அயோத்தி வழக்கு தொடர்பாக நவம்பர் 17 க்குள் தலைமை நீதிபதி தீர்ப்பை வழங்கவில்லை என்றால், இந்த வழக்கின் விசாரணை புதிய பெஞ்ச் முன் மீண்டும் வரும். எனவே அயோத்தி வழக்கின் தீர்ப்பு, நவம்பர் 17ம் தேதிக்குள் வரும் என்றுதான் எதிர்பார்ப்பு உள்ளது.
2. எதைப்பற்றி வழக்கு?
இந்த வழக்கு உத்தரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிலத்துடன் தொடர்புடையது. இந்துக்களின் நம்பிக்கையின்படி, இந்த இடம் இந்து கடவுளான ராமரின் பிறப்பிடமாகும்.
இந்த இடத்தில் இருந்த பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இந்து வலதுசாரி அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இதன் பின்னர், சர்ச்சைக்குரிய குறிப்பிட்ட, 2.77 ஏக்கர் பரப்பிலான, நில உரிமை யாருக்கு என்பது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட பெஞ்ச், 2010 செப்டம்பர் 30ல் தனது தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லல்லா பிரித்துக் கொள்ள வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டது.
3. தீர்ப்பு நாளில் என்ன நடக்கும்?
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த சமரச குழு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. எனவே வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் யாருடைய நிலம், எது என்பதை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து நீதிபதிகள் தங்கள் முடிவை ஒவ்வொன்றாக வாசிப்பார்கள். முதலில் தலைமை நீதிபதி வாசிக்க தொடங்குவார். அந்த தீர்ப்பு வரலாற்றில் இடம்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
4. தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் யார்?
அயோத்தி வழக்கை விசாரிக்கும், அரசியலமைப்பு பெஞ்சில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில், எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண், டி.ஒய் சந்திரசூட் மற்றும் எஸ்.அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் உள்ளனர். இந்த வழக்கை விசாரிக்கும் ஐந்து பேர் கொண்ட பெஞ்சில் நீதிபதி நசீர் மட்டுமே முஸ்லிம்.
5. ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி வரலாறு என்ன?
அயோத்தியில் உள்ள பாபர் மசூதி தொடர்பாக இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களுக்கு இடையிலான மோதல் ஆரம்பித்து நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது.
பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறப்பிடம் என்றும், 16 ஆம் நூற்றாண்டில் முஸ்லீம் படையெடுப்பாளர் அங்கே இந்து கோவிலை இடித்து மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் கூறுகின்றனர். மறுபுறம், 1949 டிசம்பரில், சிலர் ராமரின் சிலையை மசூதியில் வைத்திருந்ததாகவும், அதன்பிறகே மசூதியை ராமர் கோவில் இருந்த இடம் என இந்து அமைப்பினர் கூறுவதாகவும், முஸ்லிம் தரப்பு கூறுகிறது. 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் கூடிய இந்து அமைப்பினர் பாபர் மசூதியை இடித்தபோது இந்த விஷயம் நாடு முழுக்க பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
6. பாபர் மசூதி எவ்வாறு இடிக்கப்பட்டது, அடுத்து என்ன நடந்தது?
1992 டிசம்பர் 6ம் தேதியன்று, விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) தொண்டர்கள் மற்றும் பாஜக மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் அல்லது கரசேவகர்கள் ஈடுபட்டனர்.
பின்னர் பேரணி வன்முறையாக மாறியது. பாதுகாப்புப் படைகளை விரட்டியடித்த இந்த போராட்ட குழு, 16 ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதியை இடித்தது. வன்முறை மிக தீவிரமாக மாறியது. எனவே, அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயால் சர்மா உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி, சட்டசபையை கலைத்தார். இதையடுத்து, மத்திய அரசு 1993ல் ஒரு உத்தரவின் மூலம், சர்ச்சைக்குரிய நிலத்தை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலம் 67.7 ஏக்கர்.
பின்னர், இந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது, இந்த வழக்கில் 68 பேர் தான் பின்னணி காரணம் என்று கண்டறியப்பட்டது, இதில் பல பாஜக மற்றும் விஎச்பி தலைவர்களும் பெயரிடப்பட்டனர். இந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், வினய் கட்டியார், உமா பாரதி மற்றும் பல தலைவர்கள் தற்போது சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் நடைபெறும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
7. அயோத்தி பிரச்சினையின் பாதிப்பு என்ன?
உத்தர பிரதேச மாநில அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 16 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னர், நாடு முழுவதும் வகுப்புவாத கலவரங்களில் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின் வடு இன்னும் மறையவில்லை.