பாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்
Recommended Video
டெல்லி: அயோத்தியில் முகலாய அரசர் பாபர் செய்த வரலாற்றுப் பிழையை சரி செய்ய வேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றத்தில் இந்து தரப்பில் வாதத்தை முன்வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை
ஆகஸ்ட் 6முதல் விசாரணை
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் , நீதிபதிகள் டிஎஸ் சந்திரசூட், அசோக் பூஷ, எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்து ஆகஸ்ட் 6ம் தேதி முதல் விடுமுறை நாள் தவிரி தினசரி விசாரணை நடத்தி வருகிறது.
வரலாற்று பிழை
இந்த வழக்கில் செவ்வாய்கிழமையான நேற்று 39 வது நாள் விசாரணை நடந்தது. அப்போது ராம் லல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான கே.பராசரன் வாதிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா மீது படையெடுத்து வந்த பாபர் பெரும் வரலாற்று பிழை செய்தார். அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவர் 433 ஆண்டுகளுக்கு முன்பு மசூதி கட்டினார். இதன் மூலம் தன்னை விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை நிரூபிக்க முயற்சித்தார்.
இடத்தைமாற்ற முடியாது
முஸ்லீம்கள் தங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் மசூதியை கட்டிக் கொள்ள முடியும். ஆனால் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் முன்பு இருந்த கோயிலை மீண்டும் அதே இடத்தில் தான் கட்ட முடியும். ஏனெனில் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது. அயோத்தியில் இப்போது கூட 40 முதல் 50 மசூதிகள் உள்ளன. ஆனால் ராமர் பிறந்த இடம் என்பது அயோத்தியில் உள்ள அந்த ஒரு இடம் தான்." என்றார்.
எதிர் கேள்வி
இதனிடையே அதிக மசூதிகள் உள்ளதாக பராசரன் கூறிய போது முஸ்லீம் தரப்பு வழக்கறிஞர் தவன், அயோத்தியில் எத்தனை கோயில்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியாதா என்று எதிர் கேள்விகேட்டார். அதற்கு பராசரன், ராமர் பிறந்த இடம் ஒன்று தான்.அதை சுட்டிக்காட்டவே அப்படி வாதத்தை முன்வைத்தேன் என்றார்.