சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் வழக்கில் நவ.15-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு?
அயோத்தி வழக்கு- நவ.15-ல் தீர்ப்பு?
Recommended Video
டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நவம்பர் 15-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக 2010-ல் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா மூன்றும் 2.77 ஏக்கர் நிலத்தை சரி சமமாக பங்கீட்டுக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்தியஸ்த குழு அமைத்து பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தது. ஆனால் அக்குழுவின் முயற்சிகள் பலன் தரவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இம்மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஆகஸ்ட் மாதம் முதல் நாள்தோறும் நடத்தியது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது.
அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை 3 நாட்களில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய இறுதி கட்ட் விசாரணையின் போது ஒவ்வொருதரப்பும் ஆணித்தரமாக தங்களது கருத்துகளை முன்வைத்ததால் உச்சநீதிமன்றம் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது..
இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். ஆகையால் அதற்கு முன்னதாக நவம்பர் 15-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.