அயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்து மகாசபை விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று 40வது நாளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்து மகாசபை சார்பில் தங்களையும் வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஏற்க மறுத்தார்.
"முடிந்தது முடிந்ததுதான். இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும். இந்த வழக்கின் வாதங்கள் இன்றுடன் நிறைவு செய்யப்பட வேண்டும்" என்று உறுதியாக தெரிவித்து விட்டார் ரஞ்சன் கோகாய்.
அடுத்த மாதம் 17ஆம் தேதி, ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அதற்கு முன்பாக, தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. ஒருவேளை அதற்கு முன்பாக தீர்ப்பு வராவிட்டால், மீண்டும் முதலிலிருந்து விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது சட்ட நடைமுறை என்பதால் புதிதாக எந்த ஒரு மனுவையும் ஏற்க உச்ச நீதிமன்றம் தயாராக இல்லை. வழக்கு விசாரணையை முடித்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பை வழங்கி விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முனைப்பு காட்டுகிறது என்பது தலைமை நீதிபதியின் இந்த கருத்திலிருந்து நன்கு தெரிகிறது.