ராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில், இந்து தரப்பில் ஒரு வாதியான, நிர்மோகி அகாரா தரப்பின் வாதம் நிறைவு பெற்றுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று 40வது நாளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
மாலை 5 மணி
இன்று மாலை 5 மணிக்குள் வாதங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவாகும். இந்து அமைப்பான நிர்மோகி அகாரா தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், நிறைவு வாதத்தை இன்று காலை முன் வைத்தார்.
ராம ஜென்ம பூமி
வைத்தியநாதன் வாதிடுகையில், ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நீண்ட கால நம்பிக்கை. உலகில் ராம ஜென்ம பூமி அயோத்தியில் மட்டுமே இருக்கிறது. எனவே, அங்கு மட்டுமே இந்துக்களால் ராம ஜென்ம பூமி என்ற பிணைப்புடன் வழிபட முடியும்.
முஸ்லீம்கள் தொழுகை செய்ய வேறு நிறைய இடங்கள் உள்ளன. குறிப்பிட்ட இந்த இடத்தையே தர வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தொழுகை சான்று
1857 முதல் 1934 வரை சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லீம் தரப்பு வெள்ளிக்கிழமைகளில் தொழுகை நடத்தியது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. அதன்பிறகு அவர்கள் எந்த பிரார்த்தனையையும் செய்ததற்கான ஆதாரம் இல்லை.
வெளியேற்றவில்லை
இந்து தரப்பு தொடர்ந்து இந்த இடத்தில் பிரார்த்தனை செய்து வந்தது. நாங்கள் அவர்களை வெளியேற்ற முயற்சித்தோம் என்று அவர்கள் கூறுவது சரியல்ல என்பது நிரூபணமாகிறது. இவ்வாறு சிஎஸ் வைத்தியநாதன் வாதத்தை முன் வைத்தார்.