அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 9ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இந்து அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அங்கு ராமர்கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாக வைத்தும், ராமர் பிறந்த இடம் என்ற மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.
அதேநேரம் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக அயோத்திக்குள்ளேயே புதிய மசூதி கட்டிக்கொள்ள சன்னி வக்பு 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
ரஷித் மனு
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து, 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, முதன்முதலில் வழக்கு தொடர்ந்த, சித்திகி என்பவர் சார்பில், அவருடைய வாரிசான, மவுலானா சையது ஆஷாத் ரஷீத் தாக்கல் செய்தார். இதேபோல் அகில பாரத ஹிந்து மஹாசபா உட்பட, 17 பேர், சீராய்வு மனு தாக்கல் செய்தார்கள்
நிலம் சொந்தம்
ரஷீத் தாக்கல் செய்த மனுவில், அயோத்தி வழக்கில் முக்கிய பிரச்னையே, கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பது தான். அதற்கான ஆதாரம் இல்லை என, நீதிமன்றமே கூறியுள்ளது. எனவே முஸ்லிம்கள் தரப்புக்கே நிலத்தின் உரிமை இருப்பது உறுதியாகிறது. ஆனால், தீர்ப்பு மாறுபட்டு உள்ளது என்று கூறியிருந்தார்
ஹிந்து மஹாசபா ‘
ஹிந்து மஹாசபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'அயோத்தியில் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியத்துக்கு, ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, கூறியிருந்தது.
உச்ச நீதிமன்றம்
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து , உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.. தலைமை நீதிபதி அறையில் நடந்த விசாரணையில் அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.