அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் யார்? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு.. பலத்த எதிர்பார்ப்பு
Recommended Video
டெல்லி: அயோத்தி, ராம ஜென்ம பூமி நில விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. இங்குள்ள ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.
இதில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள மத்தியஸ்தர்கள் பெயரை வழக்கில் தொடர்புள்ள அமைப்புகள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டது. இதில், நிர்மோகி அகாரா அமைப்பை தவிர்த்த பிற இந்து அமைப்புகள் சமரசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், முஸ்லீம் அமைப்புகள் சமரசத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
காவி உடை அணிந்து காஷ்மீர் இளைஞர்கள் மீது தாக்குதல்... உ.பி. யில் 4 பேர் கைது
நிர்மோகி அகாரா அமைப்பு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஏ.கே.பட்நாயக் மற்றும் ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் பெயர்களை மத்தியஸ்தர்களாக பரிந்துரைத்தது. ஹிந்து மகாசபா பிரிவை சேர்ந்த சுவாமி சக்ரபாணி, உச்சநீதிமன்ற, முன்னாள் தலைமை நீதிபதிகளான ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் ஆகியோர் பெயர்களை பரிந்துரைத்தது.
இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் தொடர்பான உத்தரவை நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் பிறப்பிக்க உள்ளது. இதனால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.