பிரார்த்தனை செய்தாலே அது முஸ்லீம்கள் இடமல்ல.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்திருக்கலாம், ஆனால் கட்டுமானம், தூண்கள், உருவங்கள் மற்றும் கல்வெட்டுகள் அது இந்துக்களுக்கான இடம் என்ற உண்மையை காண்பிக்கிறது என்று, உச்சநீதிமன்றத்தில் ராம் லல்லா விராஜ்மான் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி விவகார வழக்கில் உச்சநீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தி வருகிறது.
இன்று, ராம் லல்லா விராஜ்மான் தரப்பு வழக்ககறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை முன் வைத்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்னிலையில், அவர் வாதிடுகையில், ஒரு தெருவில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்வதால், அதன் மீது உரிமை கோரலாம் என்று அர்த்தமல்ல என்று தெரிவித்தார்.
இந்த பகுதி ஒருபோதும் ஒரு மசூதியாக கருதப்படவில்லை. அதற்கான கட்டிட அமைப்பு இது அல்ல. படங்கள் (பாபர் மசூதிக்கு உள்ளே உள்ளவை) இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானவை. இஸ்லாமியர் வழிபாட்டுத் தலத்தில், மனிதரோ அல்லது, விலங்குகள் படங்களோ இருப்பதில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார். மேலும், 1990ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீதிபதிகள் பெஞ்ச் முன்பு சமர்ப்பித்தார்.
ஒரு கோவிலின் இடிபாடுகளில் கட்டப்பட்டால், அது மசூதியாக இருக்க முடியாது, ஏனெனில் இது ஷரியத் சட்டத்திற்கு அது முரணானது, என்றும், வைத்தியநாதன் ஏற்கனவே நீதிமன்றத்தில் தனது வாதத்தின்போது தெரிவித்திருந்தார்.
அயோத்தியில் கோயில் இடிக்கப்பட்டதில் உண்மையில் இரண்டு வகை கருத்துக்கள் உள்ளன. முகலாய பேரரசர் பாபரால் இடிக்கப்பட்டது என்றும், அவுரங்கசீப்தான் காரணம் என்றும் இரு வகை கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் மறுக்கமுடியாத உண்மை என்னவென்றால், கோயில் இடிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மசூதி கட்டப்பட்டது என்பதுதான். இவ்வாறு வைத்தியநாதன் தனது வாதத்தின்போது தெரிவித்தார்.
1950 ஆம் ஆண்டு பைசாபாத்தின் கமிஷனர் அறிக்கையையும் வைத்தியநாதன், மேற்கோள் காட்டியுள்ளார், இந்த சர்ச்சைக்குரிய இடத்தில் 14 தூண்கள் இந்து கடவுள்கள் மற்றும் சின்னங்களுடன் இருந்தன என்று கமிஷனர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுள்களின் உருவங்களுடன் தூண் கொண்ட ஒரு மசூதி இருக்க முடியாது, என்று அவர் மேலும் கூறினார்.