பல நாள் ஆசை.. அயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.. இவர் கூறும் தீர்வு இதுதான்!
வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசைப்பட்டபடியே தற்போது அயோத்தி வழக்கில் மத்தியஸம் பேச குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசைப்பட்டபடியே தற்போது அயோத்தி வழக்கில் மத்தியஸம் பேச குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி பிரச்சனை தீரவில்லை என்றால், இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும் என்று வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டார். அயோத்தி பிரச்சனையில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாக இருக்கும் என்று கூறி வந்தவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
கடைசியில் அவரே இந்த பேச்சுவார்த்தை குழுவில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அயோத்தி தொடர்பான மத்தியஸ்தர் குழுவில் முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காஞ்சி சங்கராச்சாரியார் முயற்சி உட்பட 4 முறை தோல்வியில் முடிந்த அயோத்தி மத்தியஸ்தம்!
என்ன குறிப்பிட்டார்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை இஸ்லாமியர்கள் விட்டுத்தர வேண்டும். இஸ்லாமிய முறைப்படி பிரச்சனை உள்ள இடத்தில் வழிபாடு நடத்த கூடாது. அதனால் அந்த நிலத்தை மொத்தமாக விட்டுத்தர வேண்டும் என்பதே ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்த பிரச்சனையில் எடுத்து இருக்கும் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
சரி கிடையாது
இந்த பிரச்சனையில் இந்துக்களுக்கு எதிரான முடிவை எடுக்க கூடாது. இங்கு இந்துக்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். எதிராக முடிவு எடுத்தால் அது கலவரத்தில் முடியும். இந்துக்களுக்கு ஆதரவான முடிவு மட்டுமே பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவும். அதைத்தான் முதலில் செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் என்ன
அதே சமயம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இஸ்லாமியர்கள் அந்த இடத்தில் இருந்து 5 கிமீ தொலைவில் மசூதி கட்ட வேண்டும். அதற்கு இந்துக்களும் உதவ வேண்டும். அப்போதுதான் அவர்கள் தோல்வி அடைந்ததாக கருத மாட்டார்கள். அப்போதுதான் இரண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கும். இவர்களுக்கு இடையில் சமாதானம் பிறக்கும் என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன எதிர்ப்பு
ஆனால் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு இஸ்லாமிய, இந்து என்று இரண்டு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வருவது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது, இந்து அமைப்புகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது உச்ச நீதிமன்றமே அவரை பேச்சுவார்த்தை குழுவில் இடம்பிடிக்க வைத்துள்ளது.