Ayodhya: அயோத்தி வழக்கு.. 25 வருட நீண்ட பிரச்சனையை தீர்க்க போகும் 3 தமிழர்கள்
அயோத்தி வழக்கில் மத்தியஸம் பேச உச்ச நீதிமன்றம் நியமித்து இருக்கும் மூன்று நபர்களும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் மத்தியஸம் பேச உச்ச நீதிமன்றம் நியமித்து இருக்கும் மூன்று நபர்களும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி வழக்கில் இன்று மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சனை உணர்வு பூர்வமான பிரச்சனை, அதனால் இதை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அதனால் தற்போது உச்ச நீதிமன்றம் இதில் பேச்சுவார்த்தை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து இருக்கிறது. இந்த குழு இன்னும் 8 வாரத்திற்குள் இந்த பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும்.
8 வாரம்தான் கெடு.. அதற்குள் பேசி தீர்க்க வேண்டும்.. முடிவை நெருங்குகிறது அயோத்தி பிரச்சனை!
மத்தியஸம் பேசும்
உச்ச நீதிமன்றத்தால் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி பிரச்சனை குறித்து இந்த குழுதான் இனி பேச்சுவார்த்தை நடத்தும். முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்படும். ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா
முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா, 2011-2012 இடையே உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். இவரது முழு பெயர் பக்கீர் முகமது இம்ரஹீம் கலிஃபுல்லா. இவர் காரைக்குடியில் 1951ல் பிறந்தார். இவர் சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். 2016ல் இவர் ஓய்வு பெற்றார். இந்த மத்தியஸ குழுவிற்கு இவர்தான் தலைமை வகிப்பார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் யார்
அதேபோல் இந்த குழுவில் இடம்பெற்று இருக்கும் இன்னொரு நபரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் சொந்த ஊர் கும்பகோணம் அருகே இருக்கும் பாபநாசம் ஆகும். இவர் ஏற்கனவே இந்த அயோத்தி பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். அங்கு ராமர் கோவில் கட்ட ஆதரவாக இவர் பலமுறை பேசியுள்ளார். ஆனால் சில இந்து அமைப்புகளே இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது .
வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு
மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு சென்னையை பூர்வீகமாக கொண்டவர். இவர் இதற்கு முன் பல மத்தியஸம் பேசும் வழக்குகளில் கலந்து கொண்டு மத்தியஸம் பேசி இருக்கிறார். இதற்காக இவர் மத்தியஸம் பேசும் அமைப்பு ஒன்றையும் உருவாக்கி உள்ளார். இந்தியாவில் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்ட முதல் மத்தியஸம் பேசும் அமைப்பை உருவாக்கியது இவர்தான். மிகவும் சிக்கலான வழக்குகளில் இவர் மத்தியஸம் பேசி இருக்கிறார்.