அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அத்வானி 1990-ல் நடத்திய ரத யாத்திரை.. ப்ளாஷ்பேக்
Recommended Video
டெல்லி: வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் இன்னும் சில மணிநேரத்தில் தீர்ப்பை வழங்க உள்ளனர். அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1990-ல் நடத்திய ரத யாத்திரையின் பங்கும் மிக முக்கியமானது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, நிர்மோஹி அகாடா மற்றும் சன்னி வக்ஃபு வாரியம் ஆகியவை சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்பது 2010-ல் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள் மீது 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தியது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் பெஞ்ச். இன்று காலை 10.30 மணிக்கு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அயோத்தி முதல் கர்தார்பூர் வரை.. ஒரே நாளில் நடக்கும் 3 முக்கிய விஷயங்கள்.. எகிறும் எதிர்பார்ப்பு!
அயோத்தி பிரச்சனை
1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி ராமர் கோவிலை கட்டுவதற்காக அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தேசத்தை பெரிதும் உலுக்கிய இச்சம்பவத்துக்கு முன்னர் 1990களில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நடத்திய ராமர் கோவிலுக்கான ரத யாத்திரை என்பது வரலாற்றில் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்று.
விபிசிங்கின் மண்டல் கமிஷன்
1990-ம் ஆண்டு.. மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் குழுவின் பரிந்துரைகளை அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்தியிருந்தார். நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்கள் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அப்போது வி.பி.சிங் அரசுக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு தந்து கொண்டிருந்தது.
ராமர் கோவிலுக்கான யாத்திரை
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது பாஜகவின் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி ரத யாத்திரையை நடத்துவதாக அறிவித்தார். அவரது ரத யாத்திரை 1990-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி தொடங்கியது.
அத்வானியை கைது செய்த லாலு
குஜராத்தின் சோம்நாத்தில் தொடங்கிய அத்வானியின் ரத யாத்திரை மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் வழியே பீகாரை சென்றடைந்தது. பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், அத்வானியின் ரத யாத்திரயை தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தார். ஆனாலும் அத்வானியின் ஆதரவாளர்கள் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியை நோக்கி சென்றனர்.
முலாயம்சிங் நடவடிக்கை
அம்மாநில முதல்வராக இருந்த முலாயம்சிங் யாதவ், அத்வானி ஆதரவாளர்களான கரசேவகர்கள் அனைவரையும் கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். அப்போதே பாபர் மசூதியின் சில பகுதிகள் சேதப்படுத்தப்பட்டன. இதனையடுத்து உத்தரப்பிரதேச போலீசார் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளில் 20 விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் உயிரிழந்தனர். அயோத்தி பகுதி 3 நாட்கள் பெரும் யுத்த களமாகவே இருந்தது.
சமூகங்களிடையே மோதல்கள்
அத்வானியின் ரத யாத்திரை வலம் வந்த பகுதிகளில் சமூகங்களிடையே மோதல்கள் வெடித்தன. இதில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். உத்தரப்பிரதேசத்தில்தான் மிக அதிகமான மோதல்கள் நிகழ்ந்தன. அங்குமட்டும் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அப்போதைய முழக்கம்
இதனைத் தொடர்ந்து வி.பி.சிங் அரசுக்கான ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. அப்போது நாடு முழுவதும் 'மண்டல்' Vs கமண்டலம் என்கிற முழக்கம் பிரதான விவாத பொருளாக இருந்தது என்பது வரலாறு.