அயோத்தி கவுண்டவுன்.. பாஜக ஆர்எஸ்எஸ் முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு.. அமைதி காக்க அழைப்பு
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ள நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்கள் சந்திப்பு நடந்தது. இக்கூட்டத்தின் இறுதியில், தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும் நாட்டு மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோயில் மற்றும் பாபர் மசூதி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த தீர்ப்பினை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்னும் சில நாட்களில் வெளியிடவுள்ளது.
அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 40 நாட்கள் தினசரி (விடுமுறை தவிர) விவாதம் நடந்தது. இந்த வழக்கில் இந்து அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். அனைத்து விசாரணையும் முடிந்தநிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 18ம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்குள் அவர் தீர்ப்பினை அறிவிப்பார் என்பது உறுதியாகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை.. கார்த்திகை பவுர்ணமி.. கூடவே அயோத்தி தீர்ப்பு.. திரண்டு வர போகும் ராம பக்தர்கள்
மத தலைவர்கள்
இந்நிலையில் மத நல்லிணக்கம் தொடர்பாக விவாதிக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இணைந்து ஒரு கூட்டத்தை டெல்லியில் நடத்தியது. இந்த கூட்டத்தில் அழைப்பின் பேரில் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமுதாய தலைவர்கள், கல்வியாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்
இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் இந்தியாவுக்கு என்றே உள்ள வேற்றுமையில் ஒற்றுமை கலாச்சாரம் மற்றும் எதுவாயினும் தேசமே முதன்மை என்ற மனநிலை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இரு தரப்பு அமைப்புகளின் முஸ்லீம் பிரதிநிதிகள் அயோத்தி தீர்ப்பு பிரச்சினைக்கு முடிவைக் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
மசூதிகள் கோவில்கள்
அதே நேரத்தில், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான கமல் ஃபாரூக்கி இந்த தீர்ப்புக்கு பின்னர் சில விஷயங்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று உரத்த குரல் எழுப்பினார், அதாவது அயோத்தி தீர்ப்பை ஒரு முன்னுதாரணமாக மேற்கோள் காட்டி வேறு எந்த மசூதிகளும் கோயில்களும் குறிவைக்கப்பட அனுமதிக்கக்கூடாது என்றார்.
ராம் லால்
இந்த கூட்டத்தில் மூத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் கிருஷ்ணா கோபால் மற்றும் ராம் லால் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, முன்னாள் மத்திய அமைச்சர் ஷா நவாஸ் உசேன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
பல்வேறு தலைவர்கள்
ஷியா, தியோபந்தி, பரேல்வி ஆகிய அமைப்புகளின் முஸ்லீம் தலைவர்களும், அஜ்மீர் ஷெரீப் மற்றும் நிஜமுதின் ஆலியா போன்ற முக்கிய தர்காவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஜமியாத் உலேமா இ ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலாளர் மௌலானா முகமது மதானி, அன்ஜுமுழனு அஜ்மீர் ஷரீப் தலைவர் சையத் மொய்னுதின் சிஸ்தி மற்றும் முஸ்லீம் வக்பு வாரிய உறுப்பினர்கள், மேலும் பல்வேறு முஸ்லீம் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஒற்றுமை வேண்டும்
இந்த கூட்டத்தில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முகமது அபாஸ் நக்வி கூறுகையில், இது ஒரு சாதகமான விவாதம், பொதுவான நன்மைகளுக்காக பிரச்சனைகளில் ஒருங்கிணைந்து செயல்படும் இந்த உரையாடல் தொடர வேண்டும் என்பது வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். பல்வேறு மதங்கள் மற்றும் நம்பிக்கைள் இருந்தாலும் தேசமே முதன்மை ஆக நமக்கு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்ஸைச் சேர்ந்த ராம் லால் வலியுறுத்தினார் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு தனி நபரின் செயலுக்கு முழு சமூகத்தையும் குறை கூறக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒற்றுமை அவசியம்
இறுதியில் பாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, சமூகத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் சதித்திட்டங்களுக்கான ஆபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தது.