அயோத்தி தீர்ப்பு: அசோக் சிங்காலுக்கு பாரத ரத்னா விருது வழங்க சு.சுவாமி கோரிக்கை
டெல்லி: அயோத்தி தீர்ப்பு வெளியாகி இருக்கும் நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மறைந்த மூத்த தலைவர் அசோக் சிங்காலுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவிக்க வேண்டும் என பாஜக ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை வரவேற்று சமூக வலைதங்களில் பதிவிட்டு வருகிறார் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், இந்த வெற்றியான தருணத்தில் அசோக் சிங்காலை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவருக்கு மோடி அரசு பாரத ரத்னா விருதை அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அசோக் சிங்கால்
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் அசோக் சிங்கால். 1984-ல் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம் உருவாக காரண கர்த்தாவாகவும் இருந்தவர் அசோக் சிங்கால்.
At this hour of victory let us remember Shri Ashok Singhal. Namo Govt must immediately announce Bharat Ratna for him
— Subramanian Swamy (@Swamy39) November 9, 2019
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தை போலீசார் கட்டாயப்படுத்தி முடித்து வைத்தனர். 2015-ம் ஆண்டு அசோக் சிங்கால் உடல்நலக் குறைவால் காலமானார்.