அயோத்தி வழக்கு: திடீரென இரவோடு அறிவித்து, சனிக்கிழமை தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்! காரணம் இதுதான்
டெல்லி: உச்சநீதிமன்றம், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அயோத்தி வழக்கில், திடீரென சனிக்கிழமை, தீர்ப்பு வழங்கியது ஏன் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். எனவே அவர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்த அயோத்தி வழக்கில், அதற்கு முன்பாக தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருந்தது உண்மைதான்.
அதேநேரம், நவம்பர் 14 அல்லது 15 ஆம் தேதியில் இதை தீர்ப்பு வெளியாகும் என்று தகவல்கள் கசிந்தன.
தீர்ப்பு
ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, உச்சநீதிமன்றத்தின் வெப்சைட்டில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அயோத்தி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதேபோன்று சனிக்கிழமை காலை சரியாக 10.30 மணிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். சுமார் அரைமணிநேரம் தீர்ப்பை வாசித்த பிறகு, பல தசாப்தங்களாக நீடித்து வந்த இந்த வழக்கு ஒரு முடிவை எட்டியது. தீர்ப்பின்படி சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புக்கு உரிமையானது என்று அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு
இதனிடையே, யாரும் எதிர்பார்க்காத வகையில் சனிக்கிழமை திடீரென தீர்ப்பு வழங்குவதாக வெள்ளிக்கிழமை இரவு உச்சநீதிமன்றம் அறிவித்தது ஏன், என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு மற்றும் அது சார்ந்த தீர்ப்பு என்பது மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம். எனவேதான் நாடு முழுக்க தீர்ப்பு வெளியான நாளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அயோத்தி மற்றும் அந்த நகரம் அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலம் முழுக்க கடந்த ஒரு வாரமாகவே காவல் உச்சகட்டத்தில் இருந்தது. வரலாறு காணாத பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.
உச்சநீதிமன்ற வெப்சைட்
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உத்தரபிரதேச தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி மற்றும் அந்த மாநில காவல் துறைத் தலைவர் ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை தனது அறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் போது, உத்தரபிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி கேட்டு அறிந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகுதான் இரவு திடீரென மறுநாளே தீர்ப்பு வெளியாகும் என்ற அறிவிப்பு உச்சநீதிமன்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டது.
அனைத்து தரப்பும் ஏற்பு
இந்த தீர்ப்பை பயன்படுத்தி சமூக விரோதிகள் அல்லது அந்நிய சக்திகள் நாட்டுக்குள் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்தது. எனவேதான் யாரும் யூகிக்க முடியாத நேரத்தில், திடீரென தீர்ப்பை சனிக்கிழமை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம். இதன் மூலமாக சமூக விரோதிகள் முன்கூட்டியே திட்டமிடுவது மற்றும் கலவரத்திற்கு நபர்களை ஒன்று சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட முடியாமல் முடங்கிப் போயினர். இதோ இப்போது அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இரு தரப்புமே வெற்றியும் இல்லை, தோல்வியும் அல்ல என்ற மனநிலையில் எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட பணிகளை நோக்கி நகரத் தொடங்கி உள்ளனர்.