வாட்.. இதுதான் கொரோனா மருந்தா? மக்களை ஆபத்தில் சிக்க வைக்கிறது அரசு.. கொதிக்கும் நெட்டிசன்கள்
டெல்லி: கொரோனா வைரசை பார்த்து பயப்பட வேண்டாம், அதற்கான தடுப்பு வழிமுறைகள் இருக்கின்றன, மற்றும் மருத்துவ முறைகள் இருக்கின்றன என்று ஆயுஷ் அமைச்சகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட, இதை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
ஹோமியோபதி மூலம் என்.சி.ஓ.வி (கொரோனா வைரஸ்) தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.சி.ஆர்.எச்) அறிவியல் ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன் பிறகு ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரஸ், தடுப்புமுறை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஹோமியோபதி மருந்தான, Arsenicum album 30 என்பதை, தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தக்காத்துக் கொள்ள உதவும்.
ஒருவேளை, பாதிப்பு தொடர்ந்தால், இதே மாதிரியில், தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். இன்ப்ளூயென்சா போன்ற நோய்த் தொற்றுக்கும், இதே மருந்தை இதே பாணியில் உட்கொண்டு நலம் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
3 நாட்கள்.. வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை சாப்பிடுங்கள்.. கொரோனா வராது! அரசு தகவல்
|
மருந்தை சொல்லுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கு ஹோமியோபதி மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய அரசு வெளிப்படையாக அறிவுரை வழங்கியுள்ளது. யுனானி மருத்துவ முறையையும் அரசு பரிந்துரைக்கிறது. அப்படியானால் எந்தெந்த யுனானி மருந்துகள் வைரசை குணப்படுத்தும் என்பது தொடர்பான முழு விவரத்தையும் அரசு வெளியிட்டு இருக்க வேண்டும். கொரோனா வைரசை, கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை என்று அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்த நெட்டிசன் சுட்டிக்காட்டுகிறார்.
|
எச்ஐவி கதைதான்
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஹோமியோபதி மருத்துவத்தால் காப்பாற்றப்பட்டோர் எண்ணிக்கை என்பது எச்ஐவி வைரஸிலிருந்து ஹோமியோபதி மருந்தால் காப்பாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இணையானது என்று கிண்டல் செய்கிறார் இந்த நெட்டிசன். அதாவது, எச்ஐவிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை, ஹோமியோபதியால் அதையும் குணமாக்கியிருக்க முடியுமே என்பதே இவரது கருத்து.
|
ஓடியாங்க ஐ.நா.
நோட்ஸ் எடுங்கப்பா.. நோட்ஸ் எடுங்கப்பா..! 1500 படுக்கை வசதி உள்ள மருத்துவமனையை சீனா வெறும் 9 நாட்களில் கட்டி கொரோனா வைரஸ் பாதித்தவருக்கு சிகிச்சை அளிக்கிறது. இந்திய அரசு, ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகளை எடுத்து குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறது. உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை இவையெல்லாம் இதிலிருந்து, நோட் எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி கிண்டல் செய்கிறார் இவர்.
|
ஆபத்து
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக ஹோமியோபதி மருந்து எடுக்க சொல்லி மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் சிக்க வைக்கிறது இந்திய அரசு. சும்மா சொல்லக்கூடாது. வாவ்.. ஜஸ்ட் வாவ்.. இவ்வாறு கிண்டல் செய்வதோடு, ஆபத்து குறித்து எச்சரிக்கையும் செய்கிறார் இந்தப் பெண் நெட்டிசன். இவ்வாறு, மத்திய அரசின் அறிவிப்பு தொடர்பாக பல்வேறு எதிர்வினைகளை, டுவிட்டரில் பார்க்க முடிகிறது. சரியாக ஆய்வு செய்யாமல் ஆயுஷ் அமைச்சகம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்க கூடாது என்பதே இவர்கள் சொல்ல வருவது.