அமித் ஷா - அய்யாக்கண்ணு திடீர் சந்திப்பு... "ராஜ்யசபா எம்பி சீட்"... பரபரக்கும் பின்னணி!
Recommended Video
டெல்லி: பாஜக தலைவர் அமித்ஷாவை விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்துப் பேசியதன் பின்னணி குறித்து தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக வாக்குறுதி கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017 -ம் ஆண்டு முதல் விவசாயிகள் பிரச்னையை மையப்படுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு. அரை நிர்வாணப் போராட்டம், நிர்வாணப் போராட்டம், எலிக்கறி சாப்பிடும் போராட்டம் என்று விதம் விதமான போராட்டங்களை நடத்தியவர். மண்டை ஓடுகளுடன் இவர்கள் நடத்திய போராட்டங்கள் நாடு முழுவதும் கவனம் ஈர்த்தன. போராட்ட காலத்தில் பிரதமரை பலமுறை சந்திக்க முயன்றும் பிரதமர் இவர்களை சந்திக்கவே இல்லை.
மோடி தலைமையிலான ஆட்சியில் எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன. அதில் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த பல போராட்டங்களில் விவசாயிகளின் போராட்டமும் ஒன்று. வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு உரிய விலை,. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி விவசாயிகள் பிரச்சினைகளை விவாதிப்பது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரி யாணா, மேற்கு வங்கம், பிஹார், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, தமிழகம் உட்பட 24 மாநிலங்களைச் சேர்ந்த 207 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லியில் மிகப்பெரிய பேரணியையும், போராட்டங்களையும் நடத்தினார்கள். ஒரு லட்சம் விவசாயிகள் கலந்து கொண்ட இந்த போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஆதரவளித்தனர்.
8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது.. அரசாணையும் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி!
இந்த நிலையில்தான் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தை விற்று கிடைத்த ரூ.1,040 ரூபாயைப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். இப்படி இன்னும் சில சம்பவங்களும் நடைபெற்றன. இப்படியாக நடைபெற்ற போராட்டத்தில் ஆளும் பாஜக அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை என்று கூறி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் 111 விவசாயிகள் மோடி போட்டியிடும் வாரனாசி தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்று அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்தார்.
அப்போது கூறிய அவர் மோடி ஆட்சிக்கு வருமுன்னர் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறியிருந்தார். இதை நிறைவேற்ற விடாமல் அவரை எது தடுக்கிறது என்று கேள்வி எழுப்பியவர் திருச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து வாரணாசி செல்ல 300 விவசாயிகள் ரயில் டிக்கெட்டுகள் எடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது பாஜகவுக்கான தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் தமிழக அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோரும் உடனிருந்துள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, "பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்தது மன நிறைவை தருகிறது. விவசாயிகள் நலன் குறித்த முக்கியமான திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று அவர் உறுதியளித்தார். அதனால் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிடப் போவதில்லை" என்று கூறினார்.
இந்த நிலையில் சந்திப்பில் என்ன நடந்தது என்று ஒன் இந்தியா தமிழுக்காக அய்யாக் கண்ணுவிடம் அமித்ஷா சந்திப்பு குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்
கேள்வி: பிரதமரை எதிர்த்து போட்டியிடுவதாக கூறியிருந்தீர்கள் இப்போது போட்டியில்லை என்கிறீர்கள் என்ன காரணம்?
பதில்: 141 நாட்கள் டெல்லியில் நாங்கள் போராடினோம் ஆளும்கட்சி எங்களை மதிக்கவே இல்லை. ஆனால் வாரணாசியில் நிர்வாணமாக சென்று மனுதாக்கல் செய்வோம் என்றதும், எங்களை அழைத்து பேசுகிறார்கள். விளைபொருள்களுக்கு உரிய விலை தருகிறோம், நதிகளை இணைக்கிறோம் ஓய்வூதியம் தருகிறோம், மரபணு மாற்றப்பட்ட விதிகளை இறக்குமதி செய்யமாட்டோம், விவசாயிகளுக்கு மக்களவை உறுப்பினர் பதவி தருகிறோம் என்றெல்லாம் வாக்குறுதி தந்துள்ளார்கள்
கேள்வி: கடந்த ஆட்சியிலும் பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன ஆனால் நிறைவேற்றவில்லை என்று நீங்கள்தான் கூறுகிறீர்கள்
பதில் : உண்மைதான் இப்போதும் நம்புகிறோம் செய்வார்கள் என்று நம்பிக்கைதானே வாழ்க்கை, செய்யவில்லை என்றால் மீண்டும் டெல்லியில் போராடுவோம்.
கேள்வி: அமித்ஷாவை சந்தித்தபோது என்ன கோரிக்கைகள் வைத்தீர்கள் அதற்கு அவர்கள் என்ன வாக்குறுதி கொடுத்தார்கள் ?
பதில்: நதிகளை இணைப்பது, இலாபகரமான விலை, ஓய்வூதியம், விவசாயிகளை சிறு விவசாயி பெரிய விவசாயி என்று பிரித்தல் கூடாது, மரபணு மாற்றப் பட்ட விதைகள் இறக்குமதி செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளை வைத்தோம். இவைகளை தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவிப்பதாக கூறியிருக்கிறார்கள்.
கேள்வி : அப்படியென்றால் உங்கள் ஆதரவு யாருக்கு
பதில் : இப்போது அமித்ஷாவின் பதிலில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. இன்று வெளியாகும் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் நாளை எங்களது முடிவை அறிவிக்க உள்ளோம் என்று கூறினார் அய்யாக்கண்ணு.